“இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை” - அமைச்சர் சேகர் பாபு
செய்தியாளர்: முருகேசன்
சென்னை பூங்கா நகரில் உள்ள கந்தகோட்டம், அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயிலில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி, ஆன்மிகப் பயணப் பேருந்துகளை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “ஆன்மீகப் பயணத்திற்கு செல்ல வேண்டும் என நினைக்கும் பொருளாதார ரீதியாக நலிவடைந்து உள்ள மூத்த குடிமக்களுக்கு உறுதுணையாக உள்ளது இந்த அரசு.
இந்தாண்டு 420 பேரை காசிக்கு அழைத்துச் செல்ல போகிறோம். 2024-ஆம் ஆண்டில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 1,008 மூத்த குடிமக்கள் ரூ.1.58 கோடி அரசு நிதியில் அறுபடை வீடுகளுக்கு 5 கட்டங்களாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
2024-25 அறிவிப்பு எண் 24-ன்படி, 1,000 பக்தர்கள் அரசு நிதியில் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அதன் ஒரு பகுதியாக இன்று 200 பக்தர்கள் ஆன்மிக பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதன் முதற்கட்ட பயணம் இன்று கந்தக்கோட்டத்தில் தொடங்கி உள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மண்டலங்களை சேர்ந்த மூத்த குடிமக்கள் செல்கின்றனர். இதற்கான செலவுகளை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்கிறது.
இதுவரையில் திருவிளக்கு பூஜையில் 47,304 பெண்கள் பங்கேற்று உள்ளனர். 1,800 நபர்களுக்கு கட்டணமில்லா திருமணம் அறிவிக்கப்பட்ட நிலையில் 1,400 பேருக்கு கட்டணமில்லா திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அரசின் ஆன்மீகப் பயணத் திட்டங்களால் பயனடைந்துள்ளனர். அடுத்தாண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும். சூரியனார் கோவிலுக்கு ஆதீன மடம் விஷயத்தில், ஆதினங்களுடன் கலந்தாலோசனை செய்து, சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
பின், “கோவில் யானைகளுக்கு அந்தந்த கோவில்களிலே குளியல் தொட்டி, மருத்துவ கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது. தேவை ஏற்படும் பட்சத்தில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்கள் அழைத்து செல்வது குறித்து பரிசீலனைக்கப்படும். ஜீவராசிகளின் மீதும் அன்பு செலுத்தும் முதல்வர் நமது முதல்வர்” என்றார்.
தொடர்ந்து, ‘பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு வேலை இல்லை; அதானால்தான் தினமும் அறிக்கை வெளியிடுகிறார்’ என்ற முதல்வரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய அன்புமணி குறித்து பேசுகையில், “பாமக நிறுவனர் குறித்து முதல்வர் கூறியதற்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். அது என்ன Unparilment word?
கடந்த காலங்களில் அரசியல் தலைவர்களை எப்படி விமர்சித்தார்கள் என்பதை அன்புமணி திரும்பி பார்க்க வேண்டும். வேலை தெரியாதவர் முதலமைச்சராக செயல்பட்டு வருவதாக பாமக நிர்வாகி தங்கர்பச்சன் பேச்சு குறித்தான கேள்விக்கு, “முதலமைச்சர் பிறந்த நாள் விழாவில் தங்கர்பச்சான் முதலமைச்சரை புகழ்ந்து பேசிய காணொளி காட்சியை உங்களுக்கு காட்டுகிறேன். அப்படி புகழ்ந்து பேசி இருப்பார். இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை” என தெரிவித்தார்.
மேலும், “தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது” என வானிதி சீனிவாசன் கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்தார்.
இசைவாணி மீதான புகாருக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, “எந்த மதத்தினரையும் வேறு மதத்தினர் புண்படுத்தக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. சட்டநடவடிக்கைகளுக்கு உட்பட்டு தவறு இருப்பின் இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.