தமிழகத்தில் விஜய்யின் தவெக 108 இடங்களை வென்றும் முழு பெரும்பான்மை எட்டாததால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது. காங்கிரஸ் மட்டும் ஆதரவு தெரிவித்த நிலையில், மற்ற கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. இந்த சூழலில் ஸ்ரீதர் வேம்பு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தி, வாக்குக்குப் பணம் தடைசெய்யப்பட்ட கடுமையான மறுதேர்தல் நடத்தினால் மட்டுமே உண்மையான மக்கள் ஆதரவு வெளிப்படும் எனக் கூறுகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு காணாத ஒரு மும்முனை போட்டியை கண்டுள்ளது. முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளை பதிவுசெய்த விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்றதோடு, 1967-க்கு பிறகு திமுக, அதிமுக இரண்டில் ஒன்றில்லாமல் தனிபெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் முதல் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற எம்ஜிஆரின் (33.52%) சாதனையை முறியடித்து விஜய் வரலாறு படைத்துள்ளார்.
விஜய்யின் தவெக 108 தொகுதிகளை வென்றபோதிலும், பெரும்பான்மையை எட்டாததால் தொங்கு சட்டசபையே தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகளுக்கு தவெக ஆதரவுகோரியிருக்கும் நிலையில், காங்கிரஸ் மட்டுமே இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளது.
தற்போது மொத்தமாக 112 தொகுதிகள் இருக்கும் சூழலில் இன்னும் பெரும்பான்மையை நிரூபிக்க 6 தொகுதிகள் தேவையாக இருக்கின்றன. இப்படியான சூழலில் மற்ற கட்சிகள் யாரும் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க முன்வராத சூழலே இருந்துவருகிறது.
இந்நிலையில் தொங்குசட்டசபை மூலம் ஆட்சி நிறுவப்பட்டால் அது நிலையற்றதாகவே இருக்கும் என்றும், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நிறுவப்பட்டு புதிய தேர்தல் நடத்துவதே சரியென்றும் ZOHO நிறுவனத்தின் தலைமை சைண்டிஸ்ட் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ஸ்ரீதர் வேம்பு, “மெஜாரிட்டி எண்கள் கிடைக்கவில்லை. அமைக்கப்படும் எந்த அரசாங்கமும் பல்வேறு இழுபறிகள் மற்றும் அழுத்தங்களால் நிலையற்றதாகவே இருக்கும். தமிழ்நாடு இதைவிட சிறந்ததற்குத் தகுதியானது.
குடியரசுத் தலைவர் ஆட்சியுடன் புதிய தேர்தல்களை நடத்துவதே சிறந்த வழியாக இருக்கலாம், 'வாக்குக்குப் பணம் இல்லை' என்ற மிகக் கடுமையான அமலாக்கத்துடன் இதைசெயல்படுத்த வேண்டும். அப்போதுதான் யாருக்கு உண்மையான மக்கள் ஆதரவு இருக்கிறது என்பது தெரியும்.
மறுதேர்தல் நடத்தப்பட்டால் விஜய் அவர்கள் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று நான் நினைக்கிறேன். அதை திமுக-அதிமுக தடுக்க விரும்பினால், அவர்கள் ஒன்றாகப் போராடட்டும். பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும், அது ஒரு இடத்தைக் கூடப் பெறாவிட்டாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டில் பாஜக ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. மக்கள் புதிதாகத் தீர்மானிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர்.