செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை  File Image
தமிழ்நாடு

மோசடி வழக்கு | செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்.. தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்!

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

PT WEB

2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் சட்டவிரோதமாகப் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது தனி உதவியாளர்கள் பி. சண்முகம், எம். கார்த்திகேயன் ஆகியோர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடையச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

செந்தில் பாலாஜி

இந்த வழக்கில் ஜூன் 2023-ல் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், செப்டம்பர் 2024-ல் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அமலாக்கத்துறை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தாலும், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவர் அமைச்சராக இருந்ததால், மாநில அரசின் விசாரணை அனுமதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை. இதனால், நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

​இந்தசூழலில் இந்த மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி மற்றும் சிலருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளது. ​இதற்கு முன்னதாக, கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு இதே வழக்கில் செந்தில் பாலாஜியை விசாரணை நடத்த அப்போதைய திமுக அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை மீண்டும் இந்த அனுமதியைக் கோரியுள்ளது.

தலைமை செயலகம்

இதற்கு முன்னதாக, கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் அப்போதைய ஆளுநருக்கு அமலாக்கத்துறை சார்பில் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டது. அக்டோபர் 2025-ல் அப்போதைய தலைமைச் செயலாளர் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், அரசு ஊழியரை விசாரிக்க மாநில அரசே தகுதியான அதிகாரம் கொண்டது. எனவே, அமலாக்கத்துறை ஆளுநரை அணுகுவதற்குப் பதிலாக நேரடியாக தலைமைச் செயலாளருக்குத்தான் கடிதம் எழுதியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, மாநில அரசின் அறிவுறுத்தலின்படி, இந்தாண்டு பிப்ரவரி 23 அன்று அந்த கடிதம் திருப்பி அனுப்பப்பட்டது.

இதனடிப்படையில், தற்போது அமலாக்கத்துறை தகுந்த ஆதாரங்கள், ரகசிய விசாரணை குறிப்புகள் மற்றும் புகார் நகல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பென் டிரைவை இணைத்து தலைமைச் செயலாளருக்கு புதிய கடிதத்தை அனுப்பியுள்ளது. முதன்முறையாக, முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தமிழக அரசு இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.