திமுகவோடு நீண்ட காலம் பிணைப்பில் இருந்த தொகுதி என்றால், அது சென்னை துறைமுகம் தொகுதிதான். 1977 முதல் 2021 வரை நடந்த 11 தேர்தல்களில் 10 முறை திமுகவே வெற்றி பெற்ற தொகுதி. முன்னாள் முதல்வர் கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன் போன்ற அரசியல் ஜாம்பவான்களை சட்டமன்றத்திற்கு அனுப்பிய திமுகவின் எஃகு கோட்டை துறைமுகம்! 2011இல் அதிமுகவின் பழ.கருப்பையா மட்டும் விதிவிலக்காக இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் பி.கே. சேகர்பாபு மூலம் மீண்டும் தொகுதியை தன் வசமாக்கிக்கொண்டது திமுக.
ஆர். கே. நகரில் அதிமுக சார்பில் இருமுறை வென்ற சேகர்பாபு, திமுகவிற்கு வந்த பிறகு 2011இல் அந்த தொகுதியில் தோல்வியடைந்தார். அதன்பிறகு 2016 தேர்தலில் துறைமுகம் தொகுதிக்கு மாறிய சேகர்பாபு, அந்த தொகுதியில் திமுகவின் முகமாகவே மாறிவிட்டார். 2016 தேர்தலில் சுமார் 4,800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேகர்பாபு, 2021 தேர்தலில் சுமார் 27,000 வாக்குகளாக அதை உயர்த்தினார். தாழ்த்தப்பட்ட மக்கள், சௌராஷ்ட்ரா சமூகத்தினர், சிறுபான்மையினர், மீனவர்கள் எனப் பன்முகத்தன்மை கொண்ட தொகுதி துறைமுகம். தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், சென்ட்ரல் ரயில் நிலையம் எனச் சென்னையின் மிக முக்கிய பகுதிகள் அமைந்துள்ள இந்தத் தொகுதியில் கிட்டத்தட்ட 1.75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பல கோடி ரூபாய் மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை இத்தொகுதிக்குக் கொண்டுவந்திருக்கிறார் சேகர்பாபு. அரசு பெண்கள் கல்லூரி மேம்பாடு, புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணி, நவீன பூங்காக்கள், உட்புற சாலைகள் மேம்பாடு எனப் பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார். ஆனாலும், கூவம் கரையோர மக்களுக்கு மாற்று வீடு, போக்குவரத்து நெரிசல், போதைப்பொருள் ஒழிப்பு என மக்களின் எதிர்பார்ப்புகள் இன்னும் மிச்சமிருக்கின்றன. இந்த முறை அமைச்சர் சேகர்பாபுவை எதிர்த்து அதிமுக சார்பில் ராயபுரம் மனோகர் போட்டியிடுகிறார்.
இவர்களோடு தவெக சார்பில் சினோர அசோக், நாம் தமிழர் கட்சி சார்பில் பௌஜான் ஷெரிஃப் ஆகியோரும் களம் காண்பது துறைமுகம் தொகுதியைத் தகிக்கும் அரசியல் களமாக மாற்றியுள்ளது!