மாநகரப் பேருந்துகள் pt web
தமிழ்நாடு

கேள்விக்குறியாகும் பயணிகள் பாதுகாப்பு.. மாநகர அரசுப் பேருந்து சேவை விரிவாக்கம் எப்போது?

சென்னையில் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை இல்லாததால் பயணிகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். அதேபோல் ஆயுட்காலம் முடிந்தும் இயக்கப்படும் பேருந்துகளால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாக மாறி இருக்கிறது..

PT WEB

செய்தியாளர் ராஜ்குமார்

இந்தியாவில் சென்னை உட்பட முக்கியமான நகரங்களில் தடையில்லா மற்றும் பாதுகாப்பான பேருந்து சேவை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பயணிகளின் வசதிக்காக 3492 பேருந்துகளை 830 வழித்தடத்தில் மாநகர போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. சாதாரண கட்டணப் பேருந்துகள், எக்ஸ்பிரஸ் பேருந்துகள், இரவு நேர பேருந்துகள் என இயக்கப்படும் பேருந்துகளில் ஒரு நாளைக்கு 32 லட்சம் பயணிகள் பயணிக்கும் நிலையில் அரசு பேருந்துகளின் சேவை முக்கியமானதாக இருக்கிறது.

இதில் கோயம்பேடு, தாம்பரம், திருவான்மியூர், பாரிமுனை, ஆவடி, பூந்தமல்லி, திருவெற்றியூர் போன்ற வழித்தடங்கள் முக்கியமானது. ஆனால், பேருந்துகளின் பராமரிப்பிலும், குறிப்பிட்ட காலத்தில் இயக்குவதிலும் தொடர்ந்து சிக்கல் ஏற்படுகிறது. அதேபோல், ஆயிரம் பேருந்துகளை 15 ஆண்டுகள் முடிந்தபின்னும் இயக்கி வருவது ஆபத்தான சூழல் என்றும், இதன் காரணமாகதான் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் மாநகர பேருந்துகள் மூலம் 1306 விபத்துகள் நடந்து இருப்பதாகவும் கூறுகின்றனர்.

பயணிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த சோமசுந்தரம் இதுதொடர்பாக கூறுகையில், “காலாவதியான பேருந்துகளுக்கு முறையான பாரமரிப்பு இல்லை. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. மழைக்காலத்தில் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. படிக்கட்டுக் கதவு இல்லாமல் ஆபத்தாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

சென்னை மக்கள் தொகை, சென்ட்ரல் ரயில் நிலையம் போன்றவற்றிலிருந்து வெளியூர் பயணிகள் சென்னைக்கு வருகை போன்ற காரணங்களால் 7500 பேருந்துகள் இயக்க வேண்டியது அவசியம். இத்தகைய சூழலில்தான், 600 மின்சார பேருந்துகளை ஆறு மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், 650 பேருந்துகளை அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் பேருந்தை சார்ஜிங் செய்வது, பராமரிப்பு பணிக்கு கூடுதலான வசதிகள் செய்ய வேண்டி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

CITU தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சவுந்திரராஜன் கூறுகையில், “மின்சார பேருந்துகளை இயக்கினால் தனியார் நிறுவனம் பராமரிப்பு செய்வதை ஏற்க மாட்டோம். இதற்கு அரசு பயிற்சி கொடுக்கலாம், அல்லது பயிற்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்யலாம் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு 3,740 ஆக இருந்த மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து இருக்கிறது. ஒரு பேருந்து கொள்முதல் செய்ய 1.20 கோடி செலவாகும் நிலை இருக்கிறது. மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தட்டுப்பாடு 500 பேராகவும் உள்ளதாக கூறுகின்றனர். தனியார் மூலம் பணி நியமனம், தனியார் பங்களிப்புடன் பேருந்துகளை இயக்குவதில் தொழிற்சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்க வேண்டியது அவசியம் என்கின்றனர்.

பேருந்து சேவை விரிவாக்கம் தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது வரும் காலத்தில் மொத்தமாக 3 ஆயிரம் பேருந்துகள் வாங்க அரசு திட்டமிட்டு இருக்கிறது. புறநகர் பகுதி மக்கள் பயன்பெற 240 சதுர கி.மீ சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.