புதுக்கோட்டையில் பள்ளி மாணவன் மீது தலைமையாசிரியர் தாக்குதல் meta ai
தமிழ்நாடு

புதுக்கோட்டை| "இங்க படிக்கக் கூடாது.." 3-ம் வகுப்பு பழங்குடியின மாணவன் மீது தாக்குதல்!

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நாடோடி பழங்குடியின மாணவனை தலைமையாசிரியர் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கீழஏம்பல் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், அதே கிராமத்தை சேர்ந்த நாடோடி பழங்குடி வகுப்பினரான மாணவர் ஒருவர் மூன்றாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று பள்ளி சென்ற அந்த மாணவனை அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி கடுமையாக தாக்கியதில் உடலில் காயங்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட சிறுவன் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பள்ளியில் மாணவன் இயற்கை உபாதை சென்றதாகவும், அதை யார் க்ளீன் செய்வது என தலைமை ஆசிரியர் தாக்கியதாகவும் அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டிள்ளனர்.

உங்க பசங்க இங்க படிக்கக்கூடாது..

இது குறித்து மாணவனின் பெற்றோர்கள் நேற்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்க சென்றபோது, அவர் தங்களை ஜாதி பெயரை சொல்லி திட்டியதோடு அந்த கிராம மக்களும் சேர்ந்து ஆசிரியருக்கு ஆதரவாக தங்களை தாக்கியதாகவும் மாணவனின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் நாடோடி பழங்குடி இனத்தை சேர்ந்த தங்கள் பிள்ளைகள் ஏழு பேர் அந்த பள்ளியில் படித்துவரும் நிலையில், உங்க பசங்க இங்க படிக்கக்கூடாது என்று ஜாதிய பாகுபாடு அங்கு பார்க்கப்படுவதாகவும், அதன் விளைவாகத்தான் தங்கள் மகன் தாக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட அந்த கிராமத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவரின் பெற்றோர் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகத்திடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் அமுதா விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இதில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஆசிரியர் தவறு செய்திருந்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்தசூழலில் மாணவனை தாக்கிய தலைமையாசிரியர் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.