கிருஷ்ணகிரியில் 2 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி மரணமடைந்தது. இதனால் திமுக இளைஞரணி கிளைச் செயலர் கைது செய்யப்பட்டார். இந்த கொடூரச் சம்பவம் அரசியல் தலைவர்களின் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கவுண்டன் கொட்டாய் கிராமத்தில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணின் இரண்டரை வயது குழந்தை, கடந்த டிசம்பர் 11ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தது.
இதுதொடர்பாக குழந்தையின் தந்தை அளித்த புகாரில்போலீஸார் விசாரணைமேற்கொண்டனர். இதில், பிரேதப் பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதியானது. இதனை தொடர்ந்து குழந்தையின் தாயுடன் பழகிவந்த கோம்பைக்காடு பகுதி திமுக இளைஞரணி கிளைச் செயலர் பெரியநாயகத்தை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் இக்கொடூரமான சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “காமவெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடும் அறிவாலயம்!
கிருஷ்ணகிரியில் 2 வயதே ஆன பெண் குழந்தையைத் திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
ஆட்சி அரியணை ஏறிய ஐந்தாண்டுகளில், "திமுககாரன்" எனும் அடைமொழி வழங்கி, ஆளுங்கட்சி கர்வத்தை ஊட்டி வளர்த்து, பச்சிளம் குழந்தையைக் கூட விட்டுவைக்காமல், பாலியல் இச்சையில் வேட்டையாடும் கொடூர மிருகங்களை வளர்த்துவிடும் கூடாரமாகவே மாறிவிட்ட அறிவாலயம் ஆட்சி ஒழிந்தால் மட்டுமே தமிழகத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும்” என பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அதிமுக, “தன்னை தற்காத்துக் கொள்ளக் கூட தெரியாத அந்த பிஞ்சுக் குழந்தையின் பாதுகாப்பு பறிபோனதற்கு யார் பொறுப்பு? என்ன குற்றம் செய்தாலும், "தி.மு.க." எனும் அடையாளம் தங்களைக் காக்கும் என வலம் வரும் இந்த ஆளுங்கட்சி "SIR"-களைக் கட்டுப்படுத்த, தண்டிக்க வக்கற்ற இந்த விடியா திமுக அரசு தானே?” என்று கடுமையாக சாடியுள்ளது.
மேலும் டிடிவி தினகரன், பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லாத திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவதே இதற்கு ஒரே தீர்வு என்று குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் தவெகவும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.