தவெக வேட்பாளர் பிரகாசம் pt
தமிழ்நாடு

பாலியல் வழக்கு| தவெக வேட்பாளர் முன் ஜாமீனை ரத்துசெய்ய வேண்டும்.. நீதிமன்றத்தில் மனு!

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளர் பிரகாசத்துக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

PT WEB

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் மற்றும் பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் பிரகாசம் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய பெண் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புகார் காரணமாக தமக்கு மிரட்டல், அவதூறு பிரசாரம், குடும்பத்தினர் குறிப்பாக பள்ளி மாணவர்களான குழந்தைகள் மன உளைச்சல் அனுபவிப்பதாக மனுவில் விளக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் பிரகாசம் என்கிற குட்டி சில மாதங்களுக்கு முன் திருவள்ளூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, அங்கிருந்த மகளிர் அணி நிர்வாகி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தவெக தலைமைக்கு புகார் கொடுத்தபோது நடவடிக்கை எடுப்பதாக கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தவெக நிர்வாகி பிரகாசம்

அதனால், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தனது கணவருடன் சென்று பாலியல் சீண்டல் அளித்த பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்திருந்தார். புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் நகர் போலீசார் பிரகாசம் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரகாசம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பிரகாசத்துக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு இருந்தது. 

தவெக நிர்வாகி பிரகாசம்

இந்தசூழலில் தான் தவெக வேட்பாளர் பிரகாசத்துக்கு வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என புகார் அளித்த பெண் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் வேட்பாளருக்கு எதிராக புகார் அளித்ததை தொடர்நது மிரட்டல் வருவதாகவும், தனது புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதன் காரணமாக பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். ஜாமீனை ரத்து செய்யாக்கோரும் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.