குழந்தை திருமணம் pt web
தமிழ்நாடு

5 ஆண்டுகளில் 3 ஆயிரம் சிறுமிகள் கர்ப்பம்... மதுரையில் அதிகரிக்கிறதா குழந்தை திருமணங்கள்

மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பமாகியுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் பிரசன்ன வெங்கடேஷ்

மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பமாகியுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றளவும் நகரம், கிராமம் என எந்த பாரபட்சமுமின்றி குழந்தை திருமணங்கள் நடந்தேறிக் கொண்டிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது...

குழந்தை திருமணம்

சமீபத்திய அரசு புள்ளி விவரங்களின் படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 34 ஆயிரத்து 497 இளம் பெண்கள் 18 வயதிற்கு முன்பாக கர்ப்பமாகியுள்ளனர். இது பரவலாக குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் சமூக சூழலை வெளிக்கொண்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. பெற்றோரிடம் எழுத்துப்பூர்வ உறுதி வாங்கி, சிறுமிகளை வீட்டுக்கு அனுப்பி விடுவதாகவே கூறப்படுகிறது.

தமிழகத்தில் 2014 முதல், குழந்தை பெற்றுக்கொள்ளும் சிறுமிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது அவர்களின் உடல் மற்றும் மன நலனை தீவிரமாக பாதிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சிறார் திருமணங்களில் நிர்வாக சீர்கேடு பெரிதும் காணப்படுவதாகவும்,18 வயதுக்கு முன்பாக குழந்தை பெற்றுக்கொள்ளும் சிறாரின் விவரங்களை முறையாகப் பகிர மறுப்பதால், கணக்கீடு மற்றும் கண்காணிப்பு தடைபட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

சட்டப்படி, 18 வயதுக்கு குறைவான பெண்ணை திருமணம் செய்து வைத்தால், அந்த நபருக்கும், திருமணத்தை ஏற்பாடு செய்தவருக்கும் இரண்டு ஆண்டுகள் வரை சிறை 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். ஆனால் நடைமுறையில் இந்தச் சட்டம் பல இடங்களில் கடுமையாக அமல்படுத்தப்படுவதில்லை என குழந்தைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கலாச்சாரம், பாரம்பரியம் என புரையோடிப்போன பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறையினரிடம் திணிக்க முயற்சிப்பதாலே இதுபோன்ற சிறார் பிரசவங்களுக்கும், குழந்தை திருமணத்திற்கும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. பல நேரங்களில், படித்த பட்டதாரிகளே சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. முறையான கல்வியும், விழிப்புணர்வும் மட்டுமே இது போன்ற செயல்களை தடுப்பதற்கான தீர்வாக பார்க்கப்படுகிறது.