செய்தியாளர்: V M சுப்பையா
சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டதை நடிகரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவினர், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை நடிகர் எஸ்.வி. சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இவ்வழக்கில் இறுதி தீர்ப்பை இன்று வழங்கிய நீதிபதி பி.வேல்முருகன், நடிகர் எஸ்.வி. சேகருக்கு வழங்கிய ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.