மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சை தேசிய உணவு தொழில்நுட்பக் கழகம் (NIFTEM-T) ஒரே ஆண்டில் 27 பொருட்களுக்கு மத்திய அரசின் காப்புரிமைகளைப் பெற்றுள்ளது. தேசிய உணவு தொழில்நுட்ப கழகத்தின் ஆராய்ச்சி முதல்வர் வெங்கடாசலபதி இது குறித்துப் பேசிகையில், ”தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசு உணவு ஆய்வு நிறுவனமான தேசிய உணவு தொழில்நுட்பக் கழகத்தில் தற்போது வரை 113 உணவு தொழில் நுட்பங்களை செய்துள்ளது. இதில் 34 பொருட்களுக்கு காப்புரிமை பெற்றுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு காப்புரிமைக்காக விண்ணப்பம் செய்துள்ளது. இந்த ஆண்டு தற்போது வரை மட்டும் 27 பொருட்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளது என்பது சிறப்பு வாய்ந்தது.
இந்த ஆண்டு சுமார் 50க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு காப்புரிமை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு நிறுவனத்திற்கு இதுபோன்று உணவு பொருட்கள் மற்றும் உணவு தயாரிப்பதற்கான இயந்திரங்களுக்கான காப்புரிமை கிடைக்கும் போது, இதனை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பயனளிக்கும்.
விவசாயிகள் அதிக அளவு சிறுதானிய உற்பத்தியை பெருக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சிறுதானியத்தில் இருந்து அதிக அளவிலான உணவுப் பொருட்கள். அதாவது, சத்தான உணவுப் பொருட்களை சுவையாக தயார் செய்து பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் முதன்மையாக கவனம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக சிறு குழந்தைகள் பெரியவர்கள் என அதிகம் விரும்பி உண்ணும் ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை சிறுதானியங்கள் மூலம் செய்வதால் சத்து மிகுந்த பொருளாக அது குழந்தைகளுக்கு போய் சேருகிறது. மேலும், தற்போது பனை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய நுங்கு போன்றவற்றிலிருந்து அதிக அளவிலான உணவுப் பொருட்கள் தயாரிக்க கூடிய பணியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு பொருட்கள் தயார் செய்யப்பட்டு, அது காப்புரிமை பெற்று பொதுமக்கள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.