நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்  முகநூல்
தமிழ்நாடு

“என்னை முழுவதுமாக குறிவைத்துள்ளனர்; அரசியல் சூழ்ச்சியாகவே இதனை பார்க்கிறேன்” - நயினார் நாகேந்திரன்!

PT WEB

செய்தியாளர் - சுரேஷ்குமார்

மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் சார்பில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் தமிழ்நாட்டில் நடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்ற விரைவு ரயில் கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்ததனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் ஏற்கெனவே சம்மன் வழங்கியிருந்தனர். இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்துக்கு நேற்று சென்ற நயினார் நாகேந்திரன், அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நயினார் நாகேந்திரன்

அப்போது பேசிய அவர், “ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடிக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். இந்த விவகாரத்தை பொருத்தவரையில் வேண்டுமென்றே அதனை பெரிதுப்படுத்தி வருகிறார்கள். 4 கோடி ரூபாய் பணத்துடன் யாரோ எங்கேயோ பிடிபட்ட நிலையில் எனது பெயரையும் சேர்த்து பயன்படுத்துக்கின்றனர். 4 கோடி ரூபாயை மட்டும் குறிவைத்து பேசுபொருளாக்கப்படுகிறது.

தமிழகத்தில் 200 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பணம் மீதான நடவடிக்கை என்னவாக இருக்கிறது? இந்த 4 கோடி விவகாரத்தை மட்டும் என்னை இணைத்து பேசி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பேன். ஏற்கெனவே போலீசார் அளித்த சம்மன் பெறப்பட்டுள்ளது. எனது உறவினர் காவல்துறை அளித்த சம்மனை பெற்றுக்கொண்டார்.

காவல்துறையிடம் இந்த வழக்கு தொடர்பாக வரும் 2 தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளேன். ஆகவே வரும் 2ஆம் தேதி நேரில் ஆஜராகி நான் விளக்கம் அளிப்பேன்.

காவல்துறையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த பிறகு டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன். குறிப்பாக பிரதமர் போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறேன்.

4 கோடி விவரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரும் எனக்கு ஏற்கெனவே அறிமுகமான நபர்கள்தான். ஆனால் அவர்கள் மட்டும் இல்லாமல் பலரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள் இருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் எனது பெயரை சம்பந்தப்படுத்தி அவர்களை மிரட்டி காவல்துறை வாக்குமூலம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது.

ஒரு சில சூழல்களில் போலீசார் மிரட்டியும் வாக்குமூலம் வாங்கியிருக்கலாம். எதனடிப்படையில் எனக்கு சம்மன் அளிக்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவரும்.

வேண்டுமென்று எனக்கு எதிராக இது போன்ற வேலைகள் செய்யப்படுகின்றன. எனது தரப்பில் அவதூறு வழக்கு எதுவும் தொடர்வதாக இல்லை. ஏனெனில் அதைவிட செய்ய வேண்டிய பணிகள் எனக்கு பல இருக்கின்றன. ரூ.4 கோடி பறிமுதல் விவகாரத்தில் எனது பெயரையும் பயன்படுத்துவது எனக்கு விளம்பரம்தான்.

என்னை முழுவதுமாக குறிவைத்துள்ளனர். அரசியல் சூழ்ச்சியாகவே இதனை பார்க்கிறேன். போலீசார் கடமையை செய்கின்றனர். எனது தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்” என்றார்.