செய்தியாளர்: மணிகண்டன்
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தனது தொகுதி மேம்பாட்டு நிதி 6 லட்சம் ரூபாயய் மதிப்பீட்டில் சிவகாசியில் காவலர் குடியிருப்பு பகுதியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று திறந்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி பாடுபடும். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மேட்ச் பிக்சிங் செய்து விளையாடி வருகின்றனர்.
சீமானும், அண்ணாமலையும் விளம்பரத்திற்காக பேசி வருகின்றனர். இவர்கள் இருவரின் பேச்சு தமிழக மக்களுக்கு போரடித்து விட்டது. சீமான் நாம் தமிழர் கட்சியை வேகமாக கலைத்து விட்டு பாஜகவில் சேர வேண்டும். தொடர்ந்து பாஜகவின் கொள்கைகளை சீமான் பேசி வருவது மிகவும் வருத்தமளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை கொள்கைகளை பேசி வரும் சீமான், சிறுபான்மையினருக்கும் தலித் மக்களுக்கும் எதிராக செயல்படுகிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விவகாரத்தில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்பின. திமுக அரசும் உடனடியாக சம்பவத்தில் ஈடுபட்ட நபரை ஒரு நாளில் கைது செய்தது. இதே அதிமுக ஆட்சிக் காலத்தில் பொள்ளாச்சி பாலியல் சம்பவ வழக்கில் குற்றவாளிகளை 11 நாட்களுக்கு பின்னர்தான் காவல்துறை கைது செய்தது.
அண்ணாமலை, சீமான் செய்வதை போல் I.N.D.I.A. கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கேள்விகள் கேட்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக கேள்வியை I.N.D.I.A. கூட்டணி கட்சியினர் எழுப்பி வருகின்றனர். தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து கூட்டணி கட்சிகளும் கேள்வி எழுப்பி வருகிறோம். நல்லது செய்தால் அரசை பாராட்டுவோம். தவறு செய்தால் அதனை சுட்டிக்காட்ட வேண்டியது எங்களது கடமை. பெண்களுக்கு எதிரான சட்ட திருத்த மசோதா வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்தார்.