செய்தியாளர் ஸ்டாலின்
வரும் கல்வியாண்டில் 500 அரசுப்பள்ளிகளை தனியார் அமைப்புகள் அல்லது பள்ளிகள் தத்தெடுத்து அதன் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவிகளை செய்யப்போவதாக செய்திகள் வெளியானது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியே இதுதொடர்பாக பேசியதாக கூறப்பட்டது. இதற்கு திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. பாஜகவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது.
இந்நிலையில், சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை மற்றும் எதிர் காலத்தில் பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “அரசு பள்ளிகள் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தி தவறானது. தனியார் பள்ளிகள் சங்க நிகழ்ச்சியில் அவ்வாறு பேசியுள்ளேனா என்பதை தெரிந்துகொள்ளாமல் வெளியிடப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உறுதிப்படுத்தாமல் அறிக்கை வெளியிட்டவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொள்கைகளை விட்டுக்கொடுத்து SSA நிதியை ஒன்றிய அரசிடம் வாங்க வேண்டாம் என தெரிவித்தவர் முதலமைச்சர். பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி சுமையை ஏற்றுள்ளது. தொடர்ச்சியாக தவறான செய்திகளை வெளியிட்டு ஒவ்வொரு முறை விளக்கம் அளித்து சோர்வடைகிறோம்.
பள்ளிக்கல்வித்துறையில் பயிலும் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகள் என்றும் நாங்கள்தான் வளர்த்து எடுக்க வேண்டும். யாருக்கும் தத்துக்கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கல்வியை மாநில பட்டியலுக்கு கொடுத்து விடுங்கள், எங்களது பிள்ளைகளை நாங்களே வளர்த்துக்கொள்கிறோம்.
SSA நிதி வராத பட்சத்தில் திட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒன்றிய அரசு நிதி தராமல் இருப்பது தமிழ்நாடு அரசுக்கு விடுக்கும் மிரட்டலாகத்தான் பார்க்கிறோம். நம் பள்ளி நம் பெருமை திட்டத்தில் 540 கோடி சிஎஸ்ஆர் நிதி வந்துள்ளது. தற்போது வரை 350 க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இனி வரும் நிதியை பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் கழிவரையை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.
தேசிய கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ஒரு தகவல் வந்தால் அதில் உண்மை தன்மை உள்ளதா என்பதை ஆராயமல் எக்ஸ் தளத்தில் பதிவிடுவது சரியா என்றும் தேசிய கட்சியின் தலைவர் ஒரு பதிவை உறுதிப்படுத்தாமல் பதிவிட்டால் மற்றவர்கள் கிண்டலடிக்க மாட்டார்களா? 44 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ள இரண்டு மாதத்தில் மானிய கோரிக்கை அறிவிக்கிறேன் காத்திருக்கவும்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஓடாத வண்டியாக இருந்த பள்ளிக்கல்வித் துறை தற்போது இந்த மூன்று ஆண்டுகளில் வண்டியை நகர்த்தி வருகிறோம். பழைய படத்தில் வருவது போல வண்டியை தள்ளு தள்ளு என குரல் மட்டும் கொடுக்கக் கூடாது அது அந்த வண்டி எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை வார்த்தையால் விளையாட கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.