தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி, ஆச்சரியம், நம்பிக்கை என கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தோல்வி மனதை பிசைக்கும் வலியாக இருப்பதாகவும், மக்கள் விருப்பமே தேர்தல் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக வெடித்திருப்பது தெளிவாகியுள்ளதாகவும் அவர் கூறி, புதிய அரசு அமைக்கவுள்ள விஜயும் தவெகக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாதளவு ஒரு மும்முனை போட்டியை தமிழக அரசியல் களம் கண்டுள்ளது. திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளே தமிழகத்தின் அரியணையில் மாறிமாறி அமர்ந்த நிலையில், இம்முறை இவ்விரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு தனிம்பெருங் கட்சியாக விஜயின் தவெக வரலாறு படைத்துள்ளது.
முதல் தேர்தலிலேயே 35% வாக்குகளை பதிவுசெய்திருக்கும் தவெக 107 தொகுதிகளில் முன்னிலை பெற்று 1967-க்கு பிறகு திமுக, அதிமுக இரண்டில் ஒன்றில்லாமல் தனிபெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததுடன், அக்கட்சியின் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான முக ஸ்டாலின் படுதோல்வியை சந்தித்திருப்பது பெரிய அதிர்ச்சிகரமான விசயமாக மாறியுள்ளது.
இந்தசூழலில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ், “இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெரு வலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள், மக்கள் பிரியம், மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.
தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் த.வெ.க தலைவர் விஜய் சார் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல ரஜினி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.