புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி திடீரென சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில், அது கொலை முயற்சியா என சந்தேகிக்கப்பட்டது.
பின்னர் ஜகபர் அலியின் மரணம் சார்ந்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனங்களின் உரிமையாளர்கள், மரணத்தில் சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் என 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் ஜகபர் அலி திட்டமிடப்பட்டு கொலைசெய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் ஜகபர் அலியின் உடற்கூறாய்வு முறையாக செய்யப்படவில்லை என்று அவரின் மனைவி சந்தேகம் தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அடக்கம் செய்யப்பட்ட ஜகபர் அலியின் உடலை தோண்டியெடுத்து ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இவ்விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது என்பது குறித்து, இங்கே அறியலாம்...
புதுக்கோட்டை மாவட்டம் வெங்கலுரைச் சேர்ந்த மரியம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சுற்றுச்சூழல் ஆர்வலரான எனது கணவர் ஜகபர் அலி கடந்த 17ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் நடைபெற்று வந்த சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வந்த அவர், சட்டவிரோத குவாரிகளால் 840 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதையும் வெளிக்கொணர்ந்தார். கடந்த 17ஆம் தேதி காட்டுபாபா மசூதியில் இருந்து தொழுகையை முடித்து வந்தவர் டிப்பர் லாரி ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது பார்ப்பதற்கு சாலை விபத்து போல தோற்றமளித்தாலும், உண்மையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட படுகொலை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குவாரிகளிடமிருந்து ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்தன. இவை தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய தயக்கம் காட்டினர். சாலை விபத்தில் எனது கணவர் உயிரிழந்த பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த கணவரின் உடல் ஜனவரி 18ஆம் தேதி மாலை 4 மணியளவில் உடற்கூறாய்வு செய்யப்பட்டாலும், அறிக்கை தரப்படவில்லை. திருமயம் அரசு மருத்துவமனையில் போதிய தடய அறிவியல் நிபுணர்களும், உடலை பாதுகாக்கும் வகையிலான குளிர்பதன சவக்கிடங்கும் இல்லை. தடய அறிவியல் விதிகளை பின்பற்றி உடற்கூறாய்வு செய்யப்படவில்லை. எலும்பு முறிவுகள் தொடர்பாக எக்ஸ்ரே எதுவும் எடுக்கப்படவில்லை.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டலின் படி உடற்கூறு ஆய்வு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். உடற்கூறு ஆய்வு தொடர்பான வீடியோ பதிவு கோரிய எங்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 10 நாட்கள் தாமதத்திற்கு பின்பு உடற்கூறாய்வு சான்றிதழ் வழங்கப்பட்டது. இது தொடர்பாக தடயவியல் நிபுணர்களுடன் ஆலோசித்த போது முதலில் நடைபெற்ற உடற்கூறாய்வு உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டாலும் அதன் முதல் தகவல் அறிக்கை எங்களுக்கு வழங்கப்படவில்லை. 20 கிலோமீட்டர் தொலைவில் தடய அறிவியல் பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகள் இருந்தும், திருமயம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்ததும், காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போதுமான தடயங்களை சேகரிக்க தவறியதும் வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்லுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஆகவே ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து, பேராசிரியர் தகுதிக்கு குறையாத இரண்டு தடய அறிவியல் நிபுணர்களோடு, தங்கள் தரப்பில் ஒரு தடய அறிவியல் நிபுணரையும் இணைத்து, புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்டவற்றை எடுத்து, மறுஉடற்கூறாய்வு செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்வதோடு, உடற்கூறாய்வு செய்த அன்றே, உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் வீடியோ பதிவை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “உடற்கூறு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது, அதோடு உடற்கூறாய்வு செய்த மருத்துவரும் ஆஜராகி லாரி ஏறியதில் ஏற்பட்ட எலும்பு முறிவுகளும், உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட காயமுமே உயிரிழப்பு காரணம்” என தெரிவித்தார்.
அதையடுத்து பேசிய நீதிபதி, “லாரி ஏறி இறங்கியதில் ஏற்பட்ட எலும்பு முறிவும், காயமுமே இறப்பிற்கு காரணம் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுக்க வேண்டிய அவசியம் என்ன?” என்ற கேள்வியை எழுப்பினார். இதனால் இச்சம்பவத்தை அரசியலுக்காகவும் விளம்பரத்திற்காகவும் பயன்படுத்த நேரிடலாம் என கருத்து தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில், “இறந்தவரின் உடலை முறையான குளிர்பதன வசதி கூட இல்லாத மருத்துவமனையில் வைத்திருந்துள்ளனர். ஆகவே ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரேகளை செய்வது கூடுதல் ஆவணமாக அமையும்” என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் வைத்த கோரிக்கைக்கு அரசுத்தரப்பில், “வழக்குப் பதிவுச் செய்ய கால தாமதம் செய்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடும்ப நபர்களிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டே உடற்கூராய்வு செய்யப்பட்டது. ஜக்பர் அலியின் உடலை அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே எக்ஸ்ரே செய்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்த பேசிய நீதிபதி, "புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையின் முதல்வர், மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்ட எக்ஸ்ரே செய்ய தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். திருமயம் தாசில்தார் முன்னிலையில், போதிய காவல்துறை பாதுகாப்புடன், ஜகபர் அலியின் உடல் புதைக்கப்பட்ட இடம் முழுவதுமாக மறைக்கப்பட்டு, எக்ஸ்ரே எடுக்கப்பட வேண்டும்.
ஊடகங்களுக்கோ, வேறு யாருக்குமோ அனுமதி தரப்படக்கூடாது. செல்போனில் புகைப்படங்களை எடுக்கவும் அனுமதிக்க கூடாது. உடல் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே செய்யப்படுவது தொடர்பான எந்த புகைப்படமும் விசாரணைக்காக அன்றி வேறு இடங்களில் பகிரப்படக்கூடாது. எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கைகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டு விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இயன்ற அளவு விரைவாக இந்த நடவடிக்கையை செய்து முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இந்நிலையில் சமூகச் செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொலை எதிரொலியாக, கனிமவளத் துறை புதுக்கோட்டை மாவட்ட உதவி இயக்குநர் லலிதா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.