அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை சனிக்கிழமை தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை தரப்பில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் டிஜிபி-யிடம் பரப்புரை நடத்த அனுமதியளிக்குமாறு மனு அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 13ஆம் தேதி திருச்சியில் பரப்புரையில் ஈடுபடுவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதியளித்திருந்தது காவல்துறை.
இது தவெகவினரை அதிருப்தியடைய வைத்திருந்த நிலையில், திருச்சி பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்க வேண்டும் என த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. த.வெ.க சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளையும், மற்ற கட்சிகள் மீது விதிக்கப்படாத நிபந்தனைகளும் த.வெ.க.வுக்கு விதிக்கப்படுவதாக கூறினார். எந்த வழியாக சென்னை திரும்ப வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், எத்தனை வாகனங்கள் வர வேண்டுமெனவும் நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் வாதிட்டார். தொடர்ந்து, கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அவர்களை வர வேண்டாம் என நாங்கள் எப்படி சொல்ல முடியும்? என கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயரமான இடங்களில் ஏறி நின்று ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களை தலைவர்களாகிய நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா? என கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து, அனைத்துக் கட்சிகளுக்கும் பொறுந்தக்கூடிய வகையில், பொதுவான விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
பொதுச்சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்கவும் உத்தரவிட்டது. அதேபோல், திருச்சியில் சேதமடைந்த பொதுசொத்துகளுக்கு இழப்பீடு விதிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.