சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவாகி, தொங்கு சட்டமன்றம் நிலவியது. காங்கிரஸ் தவெக உடன் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், சிபிஐ, சிபிஎம் ஆகியவை தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளன. 1996, 2004, 2006 காலங்களில் போலவே, இம்முறைவும் இடதுசாரிகள் வெளியாதரவால் ஆட்சியமைப்பை தீர்மானிக்கிறார்கள்.
நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றிபெற்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமைந்த நிலையில், தனிப்பெரும் கட்சியான தவெக ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தவெக கூட்டணியில் இணைந்த நிலையில், சிபிஐ மற்றும் சிபிஐஎம் ஆகிய இரு கட்சிகளும் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.
அதே நேரம் தவெக அரசின் கூட்டணியில் இடம்பெறமாட்டோம் என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. இதற்கு முன்னர் இந்த இரு கட்சிகளும் பலமுறை அரசுகளை வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளன.
அந்த வகையில் 1996-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியமைத்தாலும் அந்த அரசு 13 நாட்களில் கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து ஜனதா தளம் தலைமையிலான 13 கட்சிகள் கொண்ட ஐக்கிய முன்னணி உருவானது.
இந்த கூட்டணியில் அப்போது 32 இடங்களை கொண்ட சிபிஎம் கட்சிக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை சிபிஎம் கட்சியின் மத்தியக் குழு நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த அரசுக்கு சிபிஎம் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. அதே நேரம் இந்த கூட்டணி அரசில் இணைந்த சிபிஐ-க்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில், சிபிஐ கட்சித் தலைவர் இந்திரஜித் குப்தா உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அதைத் தொடர்ந்து 2004-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு (UPA) பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த சூழலில் 53 இடங்களை கொண்ட சிபிஎம், சிபிஐ கட்சிகள் காங்கிரஸ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தன.
இந்த ஆதரவுக்கு பதிலாக குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி, அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியை காங்கிரஸ் அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டன. இடதுசாரிகள் உருவாக்கிய இந்த குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையிலே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என அழைக்கப்படும் 100 நாள் வேலை உறுதி திட்டம் உருவாக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
மேலும், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர உதவியாக இருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மற்றும் பழங்குடியின மக்களின் நில உரிமைகளைப் பாதுகாக்கும் வன உரிமைச் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.
அதே போல 2006-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது 96 இடங்களை வென்ற திமுக ஆட்சியமைக்க காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. அந்த வகையில் தற்போது தவெக ஆட்சியமைக்கவும் இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கவுள்ளன.