விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம் குறித்து குஷ்பூ கருத்து pt
தமிழ்நாடு

விஜயின் மனைவி விவாகரத்து மனு | “தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் ஆக்கக் கூடாது..” - குஷ்பூ

விஜயின் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல்செய்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பூ கணவன் - பிரச்னை குறித்து பேச நமக்கு உரிமை இல்லை என பேசியுள்ளார்.

Rishan Vengai

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். இது தமிழ் சினிமா மற்றும் அரசியலில் பேசுபொருளாக மாறிய நிலையில், நடிகை குஷ்பூ, இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் ஆக்கக் கூடாது என கருத்து தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். விஜய் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், சங்கீதா

கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நடிகர் விஜய் - சங்கீதா திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் சஞ்சய், கனடாவில் திரைப்படத்துறை சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, தற்போது இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அதேபோல் பெண் குழந்தையான திவ்யா சாஷா அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக, சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் தென்படாததால் சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவின. இருப்பினும், அவர் தனது குழந்தைகளின் கல்வி மற்றும் வெளிநாட்டுப் பணிகளுக்காக அங்கேயே தங்கியிருப்பதாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில்தான் சங்கீதா விவாகரத்து மனுத் தாக்கல் செய்துள்ளார். 

தற்போது தமிழ் சினிமா கடந்து தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள இவ்விவகாரம் குறித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலாக்க கூடாது..

சென்னை விமான நிலையத்தில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் விஜயின் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அதை அரசியல் ஆக்க கூடாது. தனிப்பட்ட வாழ்க்கைக்குள்ள என்ன வேணாலும் பிரச்னை இருக்கலாம், கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சனைகளை நாம் பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை என தெரிவித்தார்.

குஷ்பூ

அதேபோல பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும், விஜய் இதை கடந்து தான் செல்ல வேண்டும் என அட்வைஸ் கொடுத்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் வேளையில் இப்படியான பிர்ச்னை விஜய்க்கு எழுந்திருக்கும் நிலையில், ஒரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவாகவும், மறு தரப்பினர் எதிராகவும் சமூகவலைதளங்களில் கருத்திட்டு வருகின்றனர்.