Cauvery Water Issue PT
தமிழ்நாடு

50 ஆண்டுகளில் இல்லாத அளவு.. பரிதாப நிலையில் காவிரி.. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கர்நாடகா!

50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, காவிரியில் தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் குறைந்த அளவு தண்ணீரை கர்நாடகா வழங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.

Praveen Joshva L

தமிழ்நாடு - கர்நாடகா இடையே நீண்டகாலமாக காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு உரிய நீரை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால், தமிழ்நாடு இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்டது. அதன் அடிப்படையில் 1990-இல், காவிரி நடுவர் மன்றத்தை அமைக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கு உத்தரவிட்டதன்படி, காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த 2018 ஜூன் 1 அன்று மத்திய அரசால் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் உருவாக்கப்பட்டது. எனினும், தமிழ்நாட்டுக்கு கர்நாடகா சரியான நேரத்தில் தண்ணீர் கொடுக்காமல் இருந்து வருகிறது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2013-இல் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் உள்ள பிலிகுண்டுலு அளவீட்டு நிலையத்தில் வைத்து கர்நாடகா திறந்துவிடும் நீரின் அளவு அளவிடப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆகஸ்ட் 2 வரை பிலிகுண்டுலுவில் மொத்தம் 3.687 டி.எம்.சி. காவிரி நீர் மட்டுமே கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில், ஜூன் மாதத்தில் 2.915 டி.எம்.சி., ஜூலை மாதத்தில் 0.698 டி.எம்.சி. மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 0.074 டி.எம்.சி. தண்ணீர் வந்தடைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதனைக் குறிப்பிட்டு கடந்த 50 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் காவிரியில் தமிழ்நாடு பெற்ற மிகக்குறைந்த அளவு நீர் அளவாக இந்த ஆண்டு நீர் வரத்து பதிவாகியுள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டுக்கு 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகா வழங்கவேண்டிய சூழலில் வெறும் 0.698 டி.எம்.சி. நீர் மட்டுமே தமிழ்நாட்டுக்கு வந்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதோடு, கடந்த 50 ஆண்டில் இருந்து நடுவர் மன்றம் தமிழ்நாட்டுக்குக் கொடுக்கவேண்டும் என்று கூறிய நீர் அளவை பெரும்பாலான நேரங்களில் கர்நாடகா வழங்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.