பாண்டியன்  - வளர்மதி
பாண்டியன் - வளர்மதி  pt web
தமிழ்நாடு

ஓடும் பேருந்தில் இருந்து கர்ப்பிணி மனைவியைக் காலால் எட்டி உதைத்த கணவன் ; பரிதாபமாக உயிரிழந்த மனைவி!

PT WEB

திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைமெய்யன். இவருடைய மகன் பாண்டியன் ( 24). இவருக்கும், நத்தம் கல்வேலிபட்டியை சேர்ந்த பாலமுருகன் மகள் வளர்மதி (19) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது வளர்மதி 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

உயிரிழந்த வளர்மதி

இந்நிலையில் நேற்று இரவு கணவன்- மனைவி இருவரும் திண்டுக்கல்லில் இருந்து பொன்னமராவதி நோக்கிச் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாண்டியன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. கணவன்- மனைவி இருவருக்கும் இடையே பேருந்துக்குள் வாக்குவாதம் நடந்ததுள்ளது.

அப்போது கணவாய்பட்டி ஒத்தக்கடை அருகே உள்ள பாச்சா கடை என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பின் பக்க படிக்கட்டில் அமர்ந்திருந்த பாண்டியன் அவரது மனைவியைக் காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வளர்மதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து பேருந்தின் முன்பகுதிக்குச் சென்ற பாண்டியன், "எனது மனைவியை நான் கீழே தள்ளிவிட்டேன்; பேருந்தை நிறுத்துங்கள்" எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வளர்மதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாண்டியனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் மனைவியைக் கணவனே பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.