“மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழைவிட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கியபோது எங்கு சென்றீர்கள். கடந்த ஆண்டு சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை 11 கோடி செலவிட்டதே அது எதற்காக என்று கூறமுடியுமா?” என்று தமிழக முதல்வரை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்திருக்கிறார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை. ‘போலிப்பாசம் தமிழுக்கு... பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு’ என மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு அதிக பணம் செலவிடுவது குறித்து முதல்வர் விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார் அண்ணாமலை. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது.. திமுக இதற்கு சொல்லும் பதில் என்ன? விரிவாகப் பார்ப்போம்.
சமஸ்கிருதத்தை மேம்படுத்த கடந்த 11 ஆண்டு காலத்தில் மத்திய அரசு அதிக தொகை செலவழித்ததைக் குறிப்பிட்டு, சில தினங்களுக்கு முன்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதில், “சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது. தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!” எனப் பதிவிட்டு தன் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
இதற்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்திருந்த அண்ணாமலை... “நீங்கள் மத்திய அரசில், அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு, உலகம் போற்றும் ஊழல்களைச் செய்து கொண்டிருந்த 2006 - 2014 8 ஆண்டுகளில், நீங்கள் அங்கம் வகித்த மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ₹675.36 கோடி. தமிழுக்கு வெறும் ₹75.05 கோடி மட்டுமே. அப்போது எங்கு சென்றது இந்த வாடகை வாய்கள்? கடந்த ஆண்டு, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ₹11.68 கோடி ரூபாய் செலவிட்டதே. அது எதற்காக என்று கூற முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த விமர்சனம் குறித்து திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.. அப்போது பேசிய அவர், “அண்ணாமலை எதையும் முழுதாக சொல்வதில்லை. கல்வித்துறையில் மத்திய அரசு 1950- 1951ல் Oriental languages எனும் திட்டத்தை உருவாக்கியது. இதில் பெரும்பாலும், உருது, சமஸ்கிருதம் இப்படியான linguistic minorities எனும் சொல்லக்கூடிய மொழிகளுக்கான பள்ளிகளுக்கு உதவிபுரிகிறார்கள். இதைத் தமிழில் ‘கீழ்திசை மொழி வளர்ச்சிக் கல்விக்கூடங்கள்’ எனச் சொல்லுகிறார்கள். இதில் ஒரு மொழிதான் சமஸ்கிருதம். தமிழ்நாட்டில் உருது, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் மைனாரிட்டி அந்தஸ்து கொண்டவை. இதில் 1951களிலேயே மைனாரிட்டி அந்தஸ்துடன் சமஸ்கிருதத்துக்கு 8 முதல் 12 பள்ளிகள் இருந்திருக்கின்றன.
இப்பள்ளிகளில் 6 பாடப்பிரிவுகள் இருந்தால் அதில் 3 பாடப்பிரிவுகளை சமஸ்கிருதமோ, அரபியோ அந்த மொழிகளுக்கு ஏற்ப சொல்லிக்கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு மொழிப்பாடம், மொழியில் உள்ள இலக்கியம், வரலாறு இவற்றை அந்த மொழிகளில் சொல்லிக்கொடுக்கிறார்கள். இதற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்குகிறது. ஏறத்தாழ, அரசு உதவி பெறும் மொழி சிறும்பான்மை கல்வி நிலையங்களாக செயல்படுகிறது. அதன் கீழ் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. நாமும் அதன்கீழ்தான் நிதியை ஒதுக்கியிருக்கிறோமே தவிர புதிதாக சமஸ்கிருத வளர்ச்சிக்கு திமுக அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை.
இந்த நடைமுறை இன்று நேற்று நடப்பது அல்ல.. கிட்டத்தட்ட 1950களில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த நடைமுறையின்கீழ் செலவழிக்கப்பட்ட தொகையைத்தான் அண்ணாமலை பாதியை மட்டுமே எடுத்து மீதியை அவர் வசதிக்கேற்ப சொல்லிக்கொண்டு வருகிறார். மற்றபடி அவர் சொல்வது அப்பட்டமான பொய்” எனத் தெரிவித்தார்.