தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தவெகவைச் சேர்ந்த திருப்பூர் வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமா மாற்று பேரவைத் தலைவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தினார். அவருக்கு பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திய முதல் பெண் உறுப்பினர் சத்யபாமாதான் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. பல்வேறு செய்தி நிறுவனங்களும் அதன் உண்மைத் தன்மை அறியாமல் அவரை முதல் பெண் சபாநாயகர் என்று செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1937-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ருக்மணி லட்சுமிபதி, சென்னை மாகாண சட்டப்பேரவையின் துணை பேரவைத் தலைவராக இருந்து அவையை வழிநடத்தியுள்ளதும், காங்கிரஸ் கட்சியை சார்ந்த மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.பொன்னம்மாள் 1991 மற்றும் 96 ஆகிய ஆண்டுகளில் தற்காலிக சபாநாயகராக இருந்து அவையை வழிநடத்தியதும் உறுதியானது.
அதேபோல சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் யசோதா ஆகியோரும் மாற்று பேரவைத் தலைவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியுள்ளனர். இதனால் சத்யபாமாதான் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திய முதல் பெண் என்ற தகவல் தவறானது என உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, நேற்று மாற்று பேரவைத் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் மதார் பதுருதீன் முஸ்தபா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து பேரவையை சில நிமிடங்கள் வழிநடத்தினார். இதனைத் தொடர்ந்து அவரை குறிப்பிட்டு சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் இஸ்லாமியர் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
ஆனால், இதற்கு முன்பே 2001-ஆம் ஆண்டு வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அப்துல் லத்தீப் தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் இஸ்லாமியர் என மதார் பதுருதீனை சிலர் குறிப்பிட்டு வருவது தவறான செய்தி என்பது உறுதியாகியுள்ளது.