அமெரிக்கா-ஈரான் போரால் தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் போரால் தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. சென்னை மணலியில் உள்ள ஐ.ஓ.சி. சிலிண்டர் நிரப்பும் நிறுவனத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிறுவனத்தில் இருந்து வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றுவதற்காக சென்ற லாரிகள் சிலிண்டர் ஏற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ஒரு முகவருக்கு தினமும் 4 லாரிகள் ஏற்றப்படும் நிலையில், தற்போது ஒன்று அல்லது இரண்டு லாரிகள் மட்டுமே ஏற்றப்படுவதாக லாரி ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.
மறுபுறம், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியால், பெங்களூருவில் உள்ள உணவகங்கள் இன்று முதல் மூடப்படும் என்று பெங்களூரு உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதேபோல, தமிழ்நாட்டிலும் உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் தான், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.