தெய்வானை யானையை பரிசோதித்த மருத்துவர்கள் pt web
தமிழ்நாடு

“இனி யாரையும் தாக்குவாயா?” வேடிக்கையாக கேட்ட புதிய பாகன்.. சீரியஸாக மறுத்த தெய்வானை யானை!

திருச்செந்தூர் தெய்வானை யானையிடம் இனி யாரையும் தாக்குவாயா? என்று வேடிக்கையாக பாகன் கேட்டதற்கு மாட்டேன் என்பது போல் தலையை ஆட்டிய வீடியோ காண்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

PT WEB

செய்தியாளர் பே.சுடலைமணி செல்வன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்ற 26 வயது நிரம்பிய யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 18 ஆம் தேதி இந்த தெய்வானை யானை தாக்கியதில் யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர். இதனால் தெய்வானை யானை வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தது.

தெய்வானை யானை

இந்த சம்பவத்திற்குப் பின், யானை ஓரிரு வாரங்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கடந்த வாரத்திலிருந்து யானை சாதாரண நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து யானை தினமும் கட்டப்பட்டுள்ள இடத்திலேயே குளிக்க வைக்கப்பட்டு புதிய யானை பாகன் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் பார்த்து ஆய்வு செய்து விட்டு சென்றனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் யானையை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தனர். வன கால்நடை மருத்துவர் மனோகரன், ஆறுமுகநேரி கால்நடை உதவி மருத்துவர் அருண்குமார், வன கால்நடை ஆய்வாளர் அர்னால்ட், வனவர் ரகு ஆகியோர் யானையை நேரில் பார்த்து ஆய்வு செய்தனர். அப்போது யானைக்கு அவர்கள் பழங்கள் கொடுத்தனர். அதை வாங்கி சாப்பிட்ட யானை உற்சாகமானது.

இதற்கிடையில் “இனி யாரையும் தாக்குவாயா?” என்று வேடிக்கையாக பாகன் கேட்டதற்கு, “மாட்டேன்” என்பது போல் தலையை ஆட்டியது. யானையை ஆய்வு செய்த வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் யானை சகஜ நிலையில் தான் உள்ளது. எனவே யானையை எப்போதும் போல் தினமும் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லலாம் என பரிந்துரை செய்தனர். முதற்கட்டமாக பக்தர்கள் குறைவாக உள்ள சமயங்களில் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது நலம் என்று கூறினர்.

அதைத் தொடர்ந்து “யானை தினமும் குளிக்கும் சரவண பொய்கை பகுதியில் யானையை பராமரிக்க குடில் எதுவும் அமைக்கவில்லை. குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ள இந்த சரவண பொய்கை உள்ள பகுதி மிகவும் விஸ்தாரமான பகுதியாகும். எனவே அந்த இடத்தில் யானை பராமரிக்க ஒரு குடில் அமைத்தால் யானை இயற்கை சூழலில் இருக்க மிகவும் வாய்ப்பாக இருக்கும்” என்று மருத்துவர்கள் தரப்பில் பரிந்துரை செய்துள்ளனர்.