press meet
press meet pt desk
தமிழ்நாடு

இரண்டு கர்ப்பிணிகள் உயிரிழப்பு.. மாற்றப்பட்டதா ஆவணங்கள்? போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள் சங்கம்

webteam

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 கர்ப்பிணிகள் உயிரிழந்த விவகாரம் பெரும் விவாதமாக மாறியுள்ளது. பிரசவத்திற்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் செம்மலர் மற்றும் குப்பி ஆகியோர் கடந்த மாதம் 2 மற்றும் 5ம் தேதிகளில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு காரணம், மருத்துவர்களின் அலட்சியம்தான் என்று உயிரிழந்த மருத்துவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.

semmalar

இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழப்புக்கான காரணம் குறித்து தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, உயிரிழந்த கர்ப்பிணிகளுக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படாததும், இறந்த பிறகு அனைத்து ஆவணங்களும் திருத்தப்பட்டதாகவும் தணிக்கையில் தெரியவந்தது. குறிப்பாக கர்ப்பிணி உயிரிழந்த பிறகு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டதாகவும் பகீர் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனது மனைவி செம்மலரின் மரணம் குறித்து பேசிய கணவர் முத்துக்கிருஷ்ணன், “என் மனைவிக்கு பிரசவம் நடந்து முடிந்த இரண்டு மணி நேரம் நன்றாக தான் இருந்தார். அதன் பிறகு அவரை மற்றொரு அறைக்கு மாற்றுவதற்காக ஊழியர்கள் அவரை தூக்கி போது கை தவறி கீழே விழுந்து விட்டார். இதில் ஏற்பட்ட அதிர்வில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது.

இவை அனைத்தையுமே மருத்துவமனை நிர்வாகம் மறைத்து விட்டது. மேலும் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து 10 நாள் வரை எந்தவிதமான சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை. எனது மனைவிக்கு ஏற்கனவே இதய பிரச்னை இருக்கிறது என்று சொல்லியும் யாரும் செவி கொடுத்துக் கேட்கவில்லை. என் மனைவி கீழே விழுந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட பிறகுதான் அவசரமாக சிகிச்சை மேற்கொண்டனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

letter

இந்த விவகாரத்தில் CHO எனப்படும் மாநகர நல அலுவலர் சுகாதாரத்துறையின் Executive Officer என்ற முறையில் மருத்துவக்கல்லூரி வார்டையும், கர்ப்பிணித் தாய்மார்களையும் பார்வையிட முழு உரிமையுள்ளது. ஆனால், ஆய்வு செய்த வினோத்தை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர். விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரின் தணிக்கைக்கு மருத்துவமனையின் டீன் பதிலளிக்காத நிலையில், மருத்துவர்கள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.

ஆட்சியரின் தணிக்கையை தொடர்ந்து, நேற்று காலை காலை மருத்துவர்கள் ஷோபா, ரத்னகுமார், பழனிக்குமார் ஆகியோர் அடங்கிய விசாரணை குழு அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை மையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதேபோன்று இரு தரப்பிலும் சுமூக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் நிர்மல்சன், மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனர் சாந்தா ஆகியோர் அடங்கிய குழுவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த இரு குழுக்களின் விசாரணை அறிக்கையானது ஒரு வாரத்திற்குள் சுகாதாரத்துறைக்கு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

madurai GH

இந்நிலையில், ”கர்ப்பிணிகள் உயிரிழப்பு விவகாரத்தில் மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவமனைக்கு இடையே ஏற்பட்டிருக்க கூடிய மோதல் தேவையில்லாதது. தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்த விவாகரத்தில் முறையாக விசாரணை செய்து, யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மகப்பேறு இறப்பு குறித்து விஞ்ஞான பூர்வ அறிவியலை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டு மகப்பேறு இறப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை விடுத்துவிட்டு தணிக்கை என்கின்ற பெயரில் அரசு மருத்துவர்களை குறை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளை நம்பி பிரசவத்திற்காக செல்லும் கர்ப்பிணி பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நடந்தது என்ன என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.