அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள், நீக்கியவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் மற்றும் ஒருங்கிணைந்த அதிமுகவாக இருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இதே கருத்தை வலியுறுத்தி செய்தியாளர்களை சந்தித்து இருந்தார்.
செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்த அடுத்த நாளே அவரை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டிருந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில், விழுப்புரம் அருகேயுள்ள திருவாமாத்தூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசினார். அதில், “எந்தக் கட்சி அவர்களுக்கு அடையாளம் கொடுத்தததோ... எந்தக் கட்சி அவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்ததோ... அந்தக்கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவர்களை, துரோகிகளை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறோம். அந்த கட்சி இணைய வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்?” என காட்டமாக பேசியுள்ளார்.
சிவி சண்முகத்தின் இக்கருத்துக்கு பதிலளித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், "கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என யாரும் சி.வி. சண்முகத்தின் வீட்டு வாசலில் போய் நிற்கவில்லை" என பதிலளித்திருக்கிறார்.
சிவி சண்முகம் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “சிவி சண்முகம் எடப்பாடி பழனிசாமி நிலைப்பாட்டில் இருந்து கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த பேச்சில் அண்ணாமலைக்கும் செய்தி இருக்கிறது, செங்கோட்டையனுக்கும் செய்தி இருக்கிறது. ஏனெனில், அண்ணாமலைதான் தற்போது டிடிவி தினகரனை சந்தித்து பேசியிருக்கிறார். பன்னீர்செல்வத்தை பார்க்கப்போகிறேன் என்றும் ஒருங்கிணைந்த அதிமுக இருப்பதுதான் நல்லது என்றும் பேசியிருந்தார். இந்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கருத்து வேறாக இருக்கிறது.. எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே முரண்பாடான கருத்துகள் இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்றால் தான் NDAவில் இல்லை என்பதை டிடிவி தினகரன் தெளிவுபடுத்திவிட்டார். செங்கோட்டையன் கூறுவதுபோல் ஒருங்கிணைந்த அதிமுகவிற்கு வாய்ப்பில்லை. ஓபிஎஸ் விரும்புவதுபோல் அவரைக் கட்சியில் சேர்ப்பதற்கும் வாய்ப்பில்லை. ஒரு வகையில் இது விஜய்க்கு வலு சேர்க்கலாம்" எனத் தெரிவித்திருக்கிறார்.