கலைஞர் கருணாநிதி சிலை வைக்க அனுமதி மறுப்பு.. மேல்முறையீட்டு மனுவும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலை வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், சிலை வைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காய்கறி சந்தையின் நுழைவு வாயிலுக்கு அருகில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலை மற்றும் பெயர் பலகையை நிறுவுவதற்கு வள்ளியூர் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை அமைக்க அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால், இந்த சிலையை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கருணாநிதியின் சிலையை நிறுவ அனுமதி மறுத்ததோடு பொது இடங்களில் இடையூறாக இருக்கும் சிலைகளை அகற்றவும் உத்தரவிட்டது.
இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், கருணாநிதி முழு உருவ சிலையை நிறுவ அனுமதி கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, இன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த சிலையை நிறுவுவதற்கு நெடுஞ்சாலைத்துறை மற்றும் பஞ்சாயத்து உள்ளிட்ட அனைவரும் அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள் ”ஒரு தலைவரின் புகழை பரப்புவதற்கும், அவரை பெருமை படுத்துவதற்கும் சிலை நிறுவப்படுகிறது. ஆனால், அது பொது இடத்தில் இடையூறாக இருக்கும் என கருதியே சிலையை நிறுவ சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. எனவே, அந்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை” என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் எனவும் தெரிவித்தனர்.
ஆனால், தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், மனுவை திரும்ப பெற அனுமதி அளிக்க வேண்டும். அதேவேளையில் சிலை நிறுவுவதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை மீண்டும் அணுக அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.