முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் CAA கால்வைக்க விடமாட்டோம்” - முதலமைச்சர் உறுதி

ஜெனிட்டா ரோஸ்லின்

“இன்னும் 7 நாட்களுக்குள் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும். இது நான் அளிக்கும் உத்தரவாதம்” என்று மேற்கு வங்கத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் நேற்று முன்தினம் பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது கடும் எதிர்ப்பினை மீண்டுமொருமுறை பதிவுசெய்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர்.

இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது கழகம். 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே CAA-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.

தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்!
முதல்வர் மு.க. ஸ்டாலின்

மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவேவும் முதலமைச்சர் ஸ்டாலின் “1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின்படி குடியுரிமை பெற மதம் ஒரு அடிப்படையாக இல்லை” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிஏஏ (கடந்த மாதம்) குறித்து பேசுகையில் “சிஏஏ இந்த மண்ணின் சட்டம். அதனை அமல்படுத்துவது தவிர்க்க முடியாதது” என்றுகூறியிருந்தார்.

CAA (சிஏஏ) என்றால் என்ன?

2019 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசால் குடியரசு திருத்த சட்டம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டது.

பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து, 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்ஸிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோருக்கு இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு. எனவே மதத்தினை அடிப்படையாக கொண்டு சட்டம் இயற்றப்படுவது ஏற்படுவது அல்ல. இதுவே இந்த சட்டத்திற்கு எதிராக எதிர்ப்புகள் பல கிளம்புவதற்கு பெரும் காரணமாக பார்க்கப்படுகிறது.