சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதால், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து, சிக்குன் குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் 2025 ஜனவரியில் வந்த கொசுத் தொல்லை தொடர்பான புகார்கள் 590. இந்த ஆண்டு ஜனவரியில் அது 664 ஆக அதாவது12.5% உயர்ந்துள்ளது. டெங்கு பாதிப்பு 2025இல் 4,786 ஆக இருந்த நிலையில், 2026 ஜனவரி 24 வரை மட்டும் 222 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது . சிக்குன் குனியா பாதிப்பு 2025இல் 239 ஆக இருந்தது, இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்திலேயே 23 பேருக்கு சிக்குன் குனியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொசு ஒழிப்புக்காக 3,566 பணியாளர்கள் மற்றும் 854 இயந்திரங்கள் இருந்தபோதிலும், கடந்த மூன்று மாதங்களாக எந்த உபகரணங்களும் பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மே முதல் அக்டோபர் வரை 10,255 கிலோ பழைய டயர்களையும், 83,556 கிலோ தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றியிருந்தாலும், தற்போது நிலவும் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையால் அந்த முயற்சிகள் பலனளிக்காமல் போயுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.