2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், அதிமுகவிற்கு வெறும் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி, அதிமுகவின் தொகுதி எண்ணிக்கையை குறைத்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான புதுச்சேரி அரசியல் களமும் தொகுதிப் பங்கீட்டில் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. முதலில் என்.ஆர்.காங்கிரஸ், என்டிஏ கூட்டணி உறுதிசெய்யப்பட்டாலும், தொகுதிப்பங்கீட்டில் இழுபறியே நீடித்துவந்தது. பாஜக அதிக இடங்களில் போட்டியிட கோரிக்கை வைத்தபோதும் என்.ஆர்.காங்கிரஸ் அதனை மறுவிட்டது. மேலும் அதிக தொகுதிகளில் நாங்களே போட்டியிடுவோம் என்றும், கூட்டணியில் வேறு கட்சிகளையும் இணைக்க கூடாது என்ற கண்டிசனை போட்ட என்.ஆர்.காங்கிரஸ் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவந்தது.
மிகப்பெரிய இழுபறிக்கு பிறகு 2026 சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என். ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், பாஜகவுக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதிமுகவுக்கும், புது வரவான லட்சிய ஜனநாயக கட்சிக்கும் இணையாக தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021 புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் அதிமுவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 3 தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை 9 இடங்களில் போட்டியிட்ட பாஜகவுக்கு தற்போது கூடுதலாக ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. 1974, 1977-78 என இரண்டு முறை புதுச்சேரியை ஆண்ட அதிமுக, இம்முறை வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவது கட்சியினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், அதிமுக 2 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி தர்மம் உள்ளிட்டவற்றின் காரணமாக, 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக புதுச்சேரி மாநில அதிமுக செயலர் அன்பழகன் கூறியுள்ளார்.