திமுக உடன் தொகுதிப் பங்கீடு.. போராடும் நிலையே உள்ளதாக திருமாவளவன் வேதனை!
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் திமுகவுடன் விசிக கட்சி இன்னும் முடிவுக்கு வராத நிலையில், குறைவான தொகுதிகளையே பெற்று போட்டியிடும் நிலை உள்ளது. திருமாவளவன், இது குறித்து தனது வேதனையை வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். 234 தொகுதிகளிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டாலும், குறைந்த தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என அவர் கூறியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக 25 கட்சிகளுடனும், எதிர்கட்சியான அதிமுக 14 கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த சூழலில் அதிமுகவில் தொகுதி பங்கீடு குறித்த விபரம் இன்னும் 4 நாட்களில் தெரிவிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கும் நிலையில், திமுக தங்களின் கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை ஒவ்வொன்றாக முடித்து வருகிறது.
அந்தவகையில் விசிக உடனான தொகுதிப் பங்கீடும் முடிவுக்கு வராத நிலையில், குறைவான தொகுதிகளையே பெற்று போட்டியிடும் நிலை உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருமாவளவன் வேதனை..
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று மார்ச் 21 ஆம் தேதி முதல் வரும் 24-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி விருப்ப மனு விநியோகம் தொடர்பாக கட்சித்தொண்டர்களுக்கு திருமாவளவன் பேஸ்புக்கில் வீடியோ மூலமாக விவரங்களை தெரிவித்தார்.
அதில் திருமாவளவன் கூறியதாவது, மிகக் குறைவான எண்ணிக்கையிலான தொகுதிகளையே பெற்று கூட்டணியில் போட்டியிடுகிறோம். இருந்தாலும், 234 தொகுதியிலிருந்தும் விருப்பம் மனுக்களை பெறுகிறோம். இது, மெகா கூட்டணி. 23 கட்சிகள் இணைந்துள்ள கூட்டணி. ஆகவே குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடக் கூடிய நிலையே உள்ளது. இருந்தாலும் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் எவ்வளவு பேர் போட்டியிட விரும்புகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள விருப்ப மனு பெறப்படுகிறது.
இது ஒரு ஜனநாயக நடைமுறையாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி கடைப்பிடித்து வருகிறது. விருப்பமனுக்கள் பெறப்பட்டாலும் அதன் பிறகு நேர்காணல் நடத்தப்படாது. கட்சித் தலைவர் என்ற முறையில் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பேன்.
இருந்தாலும் தமிழ்நாடு முழுவதும் விருப்ப மனுக்களை பெறுவதற்கு காரணம் நீங்கள் விருப்ப மனு அளிக்கும்போது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். ஆகவே அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறேன் என்று திருமாவளவன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிகவிற்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதில் 4 தொகுதிகளில் விசிக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

