சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

அதிமுக உட்கட்சி விவகாரம்.. “தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்” - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Angeshwar G

செய்தியாளகள் ராஜ்குமார், சுப்பையா

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

எடப்பாடி பழனிசாமி

முன்னதாக, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது சம்பந்தமான மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இரவீந்திரநாத், புகழேந்தி ஆகியோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, இரட்டை இலை, புதிய தலைமை தேர்வு செய்தது உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை என வாதம் வைக்கப்பட்டது. உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன என்றும், தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்த எவரும், அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் இல்லை, கட்சியில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் முன்வைத்த வாதத்தில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ரவீந்திரநாத், புகழேந்தி உள்ளிட்டோர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பெயர் கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது நிலைமை மாறி உள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். அதனால், இது சம்பந்தமாக விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என குறிப்பிட்டிருந்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், அருள் முருகன் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடுமட்டுமல்லாமல், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், “கட்சிக்குள் எந்தப் பிளவும் இல்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், சின்னத்தை முடக்கும் வகையிலான நடவடிக்கைகள் இருக்கக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியின் வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.