ஆதவ் அர்ஜுனா pt
தமிழ்நாடு

”2 1/2 ஆண்டுகள் முதல்வர் பதவி.. 90 தொகுதிகள்” - தவெக உடன் பேரம் பேசியதாக ஆதவ் அர்ஜுனா பேச்சு!

பாதி முதல்வர் பதவி ஆஃபரும், 90 தொகுதிகளும் வழங்குவதாக தவெக உடன் பேரம் பேசப்பட்டதாக தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

Rishan Vengai

தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக சொல்லப்படும் நிலையில், 90 தொகுதிகள் மற்றும் 2 1/2 ஆண்டுகள் முதல்வர் பதவி என தவெக உடன் பேரம் பேசப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் புதுமுகமாக களமிறங்கிய விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், முதல்முறையாக 2026 சட்டப்பேரவை தேர்தலில் களம் காணவிருக்கிறது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆட்சியில் பங்கு எனக் கூறியும் இதுவரை எந்தக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்குச் செல்லவில்லை. இதையடுத்து, தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதனிடையே விஜய் நடித்த ’ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது மற்றும் கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை என மத்திய அரசு அவருக்கு அழுத்தம் தந்து கூட்டணிக்கு வற்புறுத்துவதாகவும் சொல்லப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின்

அதேநேரத்தில், திமுக போட்டியாகக் கருதப்படும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அதிமுக பொதுச்செயலர் கே.பழனிசாமி கூறியுள்ள நிலையில், பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தவெகவும் தெரிவித்துள்ளது. ஆனால் கடைசிவரை வெளியான தகவலின் படி தவெக உடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், 80 தொகுதிகள், ஆட்சியில் பங்கு முதலிய ஆஃபர்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்தசூழலில் தவெக தரப்பில் மறுப்பு சொல்லப்பட்ட நிலையில், தற்போது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேரம் பேசப்பட்டதாக பேசியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

90 தொகுதிகள், முதல்வர் பதவி..

இன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடுகிறது. 90 தொகுதிகள் தருவதாக பேரம் பேசினார்கள், ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருக்கலாம் என பேரம் பேசினார்கள். அத்தனை பேரத்திற்கு பிறகும் அண்ணன் எனக்கு ஆஃபர் வேண்டாம், தமிழக மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் மதசார்பற்ற வலிமையான ஆட்சியை உருவாக்குவோம் என கூறினார். பதவிக்காக டெல்லிக்கு அடிபணிய மாட்டோம்” என பேசினார்.

இதற்கு முன்பு எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என தவெக தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவு, பேரம் பேசியதாகவும் ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் மாறி மாறி பேசுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.