தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் தனிப் பெருங்கட்சியக 108 இடங்களில் வெற்றி பெற்று, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது. தவெக தலைவர் விஜய் கடந்த மே-10ம் தேதி முதல்வராக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். முதலில், வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு எனத் தெரிவித்திருந்த, விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் தற்போது தவெக அமைச்சரவையில் பங்கேற்று இருக்கின்றன. இது, திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இருதரப்பினர் இடையே வார்த்தை மோதலை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, திமுக எம்.பி. ஆ. ராசா, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளை விமர்சித்து வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையில், தவெக அரசு பொறுப்பேற்றது முதல் சட்ட ஒழுங்கு சரியில்லை மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், நேற்று திருச்சியில் நடந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், தவெக அரசுக்கு 6 மாதம் அவகாசம் கொடுப்போம் எனக் கூறியவர்களால் அரை மணி நேரம் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்ததுடன் வழக்கம்போல் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தசூழலில் தான், இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ள திமுக எம்பி ஆ ராசா முதல்வர் விஜய் குறித்தும் தவெக அரசு குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், "முதல்வராக விஜய் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார். அசாம், கேரளம் உள்ள முதல்வர்கள் 40 நிடங்கள் வரை பிரதமருடன் பேசிய போது, இவர் மட்டும் ஏனோ 18 நிமிடங்கள் மட்டுமே பேசியிருக்கிறார். தொடர்ந்து, நிர்மலா சீதாராமனை மட்டும் சந்தித்து விட்டு யாரையும் சந்திக்காமல் தமிழ்நாடு வந்திருக்கிறார். நேற்று, திருச்சி சென்ற அவர், தான் வகிக்கும் முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவராக இல்லாமல், தன் தகுதியைக் குறைத்துக்கொண்டு வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறார். இதை யார் எழுதிக் கொடுத்தது.
விஜய் ப்ரோ என்று நாங்களும் கேட்போம். யாரைப்பார்த்து நீங்கள் குறை சொல்கிறீர்கள். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நீங்கள் கோரிக்கை மனு அளித்துள்ளீர்கள். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நீங்கள் கெஞ்சி கொண்டிருக்கிறீர்கள். சட்டம்-ஒழுங்கை மேம்படுத்த எதற்கு கால அவகாசம் வேண்டும். சிங்கப்பெண் திட்டத்திற்கு கையெழுத்து போட்டீர்கள்.. சிங்கப்பெண் திட்டத்திற்கு பட்ஜெட் என்ன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? சிங்கப்பெண் திட்டத்திற்கு எத்தனை காவலர்கள் கூடுதலாக எடுக்கப்பட்டுள்ளார்கள்? எத்தனை வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது?
நீங்கள் பேசுவது கைதட்டுவதற்காக உணர்ச்சியை தூண்டி பேசுகிறீர்கள். தொகுதி மறு வரையறை திட்டத்தை நாங்கள்தான் நிறுத்தி வைத்துள்ளோம். பி.எம். ஸ்ரீ திட்டத்தை 2000 கோடி கூட வேண்டாம் என தெரிவித்து ஏற்றுக்கொள்ளவில்லை. " விஜய் ப்ரோ" பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்? நீங்க என்ன நாரசக்தியா.. நீங்கள் ஜாதி மதம் பார்த்து வேட்பாளர்கள் போடவில்லையா? திருச்சி கிழக்கு மக்கள் ஜாக்கிரதையாக இருங்கள். திமுக, ஸ்டாலின் இருக்கிற வரை தான் மேகதாதுக்கு பிரச்சனை என டி.கே.சிவகுமார் சொல்கிறார். கச்சத்தீவு விவகாரம், பக்ரீத் விவகாரம் எதற்கும் பதில் இல்லை. மின்சார தடைக்கு ஸ்டாலின் அரசு தான் காரணம் என ஏன் சொல்கிறீர்கள். ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை. ஏதாவது நல்ல முடிவெடுங்கள் ப்ரோ இல்லை என்றால் நன்றாக இருக்காது ப்ரோ.
அதேபோல, ஒவ்வொரு வரிக்கும் திமுகவை குறை சொல்வதுடன், திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி. மற்றவர்கள் எல்லாம் அல்லு, சில்லு என பேசியுள்ளார். முதலமைச்சரே உங்களுக்கு சங்கடமா இல்ல.. அல்லு சில்லுகளின் வீட்டிற்கு நீங்களே சென்று சால்வை போட்டு ஓட்டை வாங்கினீர்களே அந்த அல்லு சில்லுகளிடம் கெஞ்சி கூத்தாடியது தில்லு முல்லா? அரசியல் அநாகரீகமா? திமுக உங்கள் நியாமான எல்லா செயல்களுக்கு துணை நிற்க தயாராக இருக்கிறது. ஆனால், இப்படி எல்லாம் முதிர்ச்சி, பக்குவம் இல்லாத, எதைப் பற்றியும் சிந்திக்காத ஒரு தான்தோன்றித்தனமாக அரசாங்கத்தை தந்து கொண்டிருக்கிருக்கீர்கள். முன் அனுபவம் இல்லாதது தப்பு கிடையாது. உங்களுக்கு ஓட்டு போட்டது வெறும் 35 சதவீதம் தான். 65 சதவித மக்கள் உங்களை வேண்டாம் என வாக்களித்துள்ளனர். தமிழ்நாடு மக்களுக்கு நான் ஒருவன் தான் தலைவர் என சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை” எனப் பேசியிருக்கிறார்.