நாளை தென்கிழக்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. மேலும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து, 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டியிருக்கும் பகுதிகளில் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், நாளை (நவம்பர் 22) தென்கிழக்கு அந்தமான் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும், வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை, இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுபெற்று புயலாக மாறினால், சென்யார் என்று பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதால், தமிழகத்தில் தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து, நாளை (நவம்பர் 22) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் (நவம்பர் 23) தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வுமையம் விடுத்திருக்கிறது