
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலும், ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கையிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடலோர தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூரிலும், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கையிலும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.