கேண்டிடேட்ஸ் தொடரில் உலகின் 8 சிறந்த வீராங்கனைகளுக்கு எதிராக விளையாடி, கடைசி இடத்தில் இருந்து எழுந்து பட்டத்தை வென்ற வைஷாலி, நடப்பு உலக சாம்பியன் ஜூ வென்ஜுனை எதிர்கொள்ளும் உரிமையை பெற்றுள்ளார். தன் சகோதரர் பிரக்ஞானந்தாவை விட முன்னதாகவே உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்று, இந்திய பெண்கள் செஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதியுள்ளார்.
செய்தியாளர் - சந்தானகுமார்
செஸ் உலகின் மிக பெரிய பட்டமாக பார்க்கப்படும் உலக சாம்பியன் பட்டத்திற்கு போட்டியிட வேண்டும் என்றால் கேண்டிடேட்ஸ் தொடரை வெற்றி பெற வேண்டும், அவ்வாறு வெற்றி பெறும் நபர் உலக சாம்பியனை எதிர்த்து அந்த பட்டத்திற்கு போட்டியிடுவார். ஆனால் அவ்வளவு எளிமையாக அந்த இலக்கை எட்ட முடியாது, பல்வேறு சவால்களை கடந்தால் மட்டுமே CANDIDATES தொடருக்கு தேர்வாக முடியும். CANDIDATES தொடரில் உலகின் 8 சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றாலே அந்த இடத்தை அடைய முடியும்.
அந்த வகையில் பார்த்தால் இந்தியாவில் இருந்து உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி உள்ள இரண்டாவது பெண் வீராங்கனை என்று வைஷாலி இருந்தாலும் புதிய விதிமுறைகள் அடிப்படையில் இந்த தொடருக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை வைஷாலி படைத்துள்ளார்.
CANDIDATES தொடரை வென்றதன் மூலம் வைஷாலி நடப்பு உலக சாம்பியன் Ju Wenjun வை எதிர்கொள்ள உள்ளார். 14 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் முதல் ஐந்து சுற்றுகள் முடிவில், வைஷாலி கடைசி இடத்தில் திவ்யா தேஷ்முக் மற்றும் Tan Zhongyi உடன் இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரை வென்றுள்ளார், ஆரம்பத்தில் அவருடன் கடைசி இடத்தில் இருந்த வீராங்கனைகள் கடைசி இரண்டு இடங்களில் முடித்துள்ளதை வைத்து பார்த்தாலே இந்த வெற்றியை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
வைஷாலி தனது இறுதி போட்டியில் Kateryna Lagno எதிராக விளையாடிய நிலையில், பட்டத்தை உறுதிப்படுத்த அவர் வெற்றி பெற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்ற நிலை இருந்தது.
அதே நேரத்தில், Divya Deshmukh – பிபிசாரா எதிராக விளையாடிய போட்டி டிரா ஆகி, வைஷாலியின் வெற்றிக்கான வாய்ப்பை திறந்தது. இவ்வாறு அனைத்து முடிவுகளும் ஒரே நேரத்தில் சாதகமாக அமைய, வைஷாலி தனது கட்டுப்பாட்டில் இருந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, பட்டத்தை வென்றார்.
கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு முன்பே தன்னுடைய செஸ் பயணத்தை வைஷாலி தொடங்கி இருந்தாலும், பிரக்ஞானந்தாவின் அக்காவாகவே பல இடங்களில் அவர் அடையாளம் காணப்பட்டார், இந்தியாவில் 93 கிராண்ட்மாஸ்டர்கள் இருந்தாலும் 4 பேர் மட்டுமே பெண்கள் என்பதில் இருந்தே அது எவ்வளவு கடினமான பாதை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்,
தனக்கான அங்கீகாரம் வெளியே கிடைக்கவில்லை என்று ஒரு போதும் வைஷாலி ஆதங்கப்படவில்லை, மாறாக தன்னுடைய வெற்றிகள் மூலமாகவே அதற்கான பதில்களை அவ்வப்போது கொடுத்து வந்தார். போராட்ட குணத்தின் அடையாளமாக பார்க்கப்படும் வைஷாலி தற்போது உலக சாம்பியன்ஷிப் பட்டத்திற்கும் பிரகனந்தாவிற்கு முன்பாகவே முன்னேறி சாதனையும் படைத்திருக்கிறார் வைஷாலி.