rohit sharma
rohit sharma X
T20

"அந்த 2 வீரர்களுடன் நான் அறையை பகிர்ந்துகொள்ள மாட்டேன்!" - யாரை சொல்கிறார் ரோகித் சர்மா?

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன்சி பதவியிலிருந்து விலக்கப்பட்ட ரோகித் சர்மா, தற்போது ஒரு வீரராக மட்டுமே விளையாடிவருகிறார். கேப்டன்சி மாற்றத்தால் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருக்கும் இடையே பிரச்னை இருந்துவருவதாகவும், அணியில் ஒற்றுமையில்லாமல் மும்பை அணி இரண்டு பிரிவுகளாக உடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஒரு கடுமையான சூழலில் இருந்துவரும் ரோகித் சர்மா, முடிந்தவரை மற்றவீரர்களுடன் ஜாலியாக இருந்துவருகிறார். என்ன தான் ஹர்திக் பாண்டியாவுடன் பிரச்னை இருந்தாலும் அவருக்காக ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட ரோகித் சர்மா ரசிகர்களின் விருப்பமான மும்பை வீரராக மாறியுள்ளார்.

Rohit - Hardik

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரோகித் சர்மா, 2 வீரர்களுடன் ஒருபோதும் தனது அறையை பகிர்ந்துகொள்ள மாட்டேன் என்று ஜாலியான பதிலை சொல்லி எல்லோரையும் கலகலப்பாக்கினார்.

அந்த 2 வீரர்களுடன் அறையை பகிர்ந்துகொள்ள மாட்டேன்!

நெட்ஃபிளிக்ஸின் தி கிரேட் இந்தியன் கபில் ஷோவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் ஷர்மாவுடன் நடந்த உரையாடலின் போது பேசிய ரோகித் சர்மா, “இப்போதெல்லாம் அனைவருக்கும் தனித்தனியாக அறை கிடைக்கிறது. ஆனால் எனக்கு ஒரு தனி அறையைப் பகிர வாய்ப்பு கிடைத்தால், இரண்டு வீரர்களுடன் அறைகளைப் பகிர்ந்து கொள்ள நான் விரும்பமாட்டேன். அதுவேறுயாருமில்லை ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பண்ட் தான், அவர்கள் மிகவும் குளறுபடியானவர்கள்“ என்று கலகலப்பாக தெரிவித்தார்.

Rohit Sharma

எதற்காக அப்படி சொல்கிறார் என்பதற்கு விளக்கமளித்த அவர், “ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் பயிற்சிக்குப் பிறகு, தங்கள் ஆடைகளை படுக்கையிலே தூக்கி எறிவார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்கள் மதியம் 1 மணி வரை தூங்குவதால், அவர்களின் அறை எப்போதும் கலைந்தே தான் இருக்கும். அதனால்தான் அவர்களின் அறைகள் பெரும்பாலும் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு குளறுபடியாகவே இருக்கும். அவர்களைச் சுற்றி வசிப்பவர்களுக்கு இது ஒரு பிரச்னையாக மாறும். எனவே, அவர்களுடன் என்னால் இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்” என்று ஜாலியாக கூறினார்.