வைபவ் சூர்யவன்ஷி, ராகுல் டிராவிட் எக்ஸ் தளம்
T20

13 வயது வீரரை ரூ.1.10 கோடிக்கு ஏலம் எடுத்தது ஏன்? RR Head Coach ராகுல் டிராவிட் விளக்கம்!

13 வயது வீரரை ரூ.1.10 கோடிக்கு ஏலம் எடுத்தது ஏன் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார்.

Prakash J

ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, ஐபிஎல் 2025 மெகா சீசனுக்கான ஏலம் சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் இரண்டு நாட்கள் (நவ. 24, 25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 10 அணிகளும் தங்களுடைய பிரதான வீரர்களை ஏலம் எடுப்பதில் ஆர்வம் காட்டின. அந்த வகையில் ஏலத்தின் 2வது நாளின் கடைசி செஸ்ஸனில் 13 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி 1 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டார்.

இதன்மூலம், இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் ஏலம் போன வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். அதாவது, ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் ஏலத்திற்கு வந்த வீரராக, 13 வயது வைபவ் சூர்யவன்ஷி பதிவுசெய்யப்பட்டார். 2025 ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு 13 வயது இந்திய பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் வாசிக்கப்பட்டது. இளம் வயது வீரரான அவரை விலைக்கு வாங்க டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் போட்டி போட்டன. இவர்களின் போட்டி 1 கோடியை கடந்த நிலையில், இறுதியில் 1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் விலைக்கு வாங்கியது. இதன்மூலம், உலகம் முழுவதும் பேசுபொருளானார்.

அதேநேரத்தில், வைபவ் சூர்யவன்ஷி வயதை குறைத்து காட்டி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல நெட்டிசன்கள் 2023-இல் வைபவ் சூர்யவன்ஷி பேசியதாக ஒரு வீடியோவை பகிர்ந்து, அந்த வீடியோவின்படி அவருக்கு அப்போதே 14 வயது என்றும் தற்போது அவருக்கு 15 வயதைக் கடந்திருக்கும் என்றும் குற்றச்சாட்டு வைத்தனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அவரது தந்தை மறுத்தார்.

இதற்கிடையே, வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 மேல் எடுத்தது குறித்து கேள்வி எழும்பிய நிலையில் அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர், “எங்கள் முக்கிய இலக்காய் இந்திய பேட்ஸ்மேன்கள் பலரைத் தக்க வைத்துக் கொண்டு இந்த ஏலத்திற்கு வந்தோம். அவரிடம் (வைபவ் சூர்யவன்ஷி) சில நல்ல திறன்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன். எனவே, அவருக்கு இது வளர்வதற்கான நல்ல சூழ்நிலையாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். வைபவ் எங்களுடைய பயிற்சி முகாமுக்கு வந்தார். அங்கே அவருடைய திறமைகளை பார்த்து மகிழ்ச்சியடைந்தோம்" என விளக்கமளித்துள்ளார்.