தோனி, கெய்க்வாட்
தோனி, கெய்க்வாட் புதியதலைமுறை
T20

‘இனியும் என்னை எதிர்பார்க்காதீங்க.. இனி ருதுதான் உங்கள் நாயகன்’ - கடைசி நேரத்தில் தோனி செய்த செயல்!

யுவபுருஷ்

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் தற்போதைக்கு ராஜஸ்தான் அணி களமாடிய அத்தனை போட்டிகளிலும் வெற்றியை தக்கவைத்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. கொல்கத்தா அணி 2ம் இடத்திலும், லக்னோ அணி மூன்றாம் இடத்திலும் இருக்க, சென்னை அணி 4வது இடத்தில் இருக்கிறது.

இதுவரை 5 போட்டிகளில் களமாடி அதில் 3போட்டிகளில் வெற்றியை ருசித்துள்ளது சென்னை அணி. குறிப்பாக, தோனி நடப்பு ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பேட்டிங் செய்ய அவர் களமிறங்கும்போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்கும் வகையில் இருக்கிறது.

அந்த வகையில், கொல்கத்தா - சென்னை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, பேட்டிங் செய்த சென்னை அணியில் ரச்சின் 15 ரன்களுக்கு அவுட் ஆக ருதுராஜ் நிதானமாக விளையாடினார். அடுத்தடுத்த விக்கெட்டுகளுக்குப் பிறகு டுபேவும் அவுட்டாக, அடுத்ததாக ஜடேஜாவுக்கு பதிலாக தோனி களத்தில் இறங்கினார்.

3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நேரத்தில் களத்தில் இறங்கிய தோனி, ஸ்டிரைக்கில் ருதுராஜ் இருந்ததால் அவர் ஒரு ரன் அடித்துவிட்டு ரன் ஓடினார். அடுத்ததாக ஸ்டிரைக்கிற்கு சென்ற தோனி சிக்ஸர் அடித்து தனது பாணியில் மேட்ச்சை முடிப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், 3 பந்துகளை எதிர்கொண்ட தோனி 1 ரன்னை மட்டும் அடித்துவிட்டு அடுத்த பக்கம் சென்றார். தொடர்ந்து, ஒரு ரன் தேவைப்பட்ட இடத்தில் ஃபோரை அடித்து மேட்ச்சை முடித்தார் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.

நடப்பு ஆண்டோடு தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘இனியும் என்னை எதிர்பார்க்காதீர்கள். இனி உங்கள் எதிர்காலம் ருதுராஜும், அணியும்தான்’ என்பதை உணர்த்தும் விதமாகவே தோனி இவ்வாறு செய்ததாக கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக, அணியின் எதிர்கால நலன் கருதியே, கேப்டன் பொறுப்பை ருதுராஜிற்கு தோனி மாற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.