Folarin Balogun x page
கால்பந்து

FIFA 2026 | அமெரிக்க வீரருக்கு ’ரெட் கார்டு’.. தலையிட்ட அதிபர் ட்ரம்ப்.. வெடித்த சர்ச்சை!

பெல்ஜிய கால்பந்து சங்கம் (RBFA) இம்முடிவைக் கண்டு அதிர்ச்சியடைவதாகவும், இது விளையாட்டு தர்மத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது.

Prakash J

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஃபோலரின் பாலோகுன் சிவப்பு அட்டை பெற்ற விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொண்ட தலையீடு சர்வதேச விளையாட்டரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், 'ரவுண்ட் ஆஃப் 32' சுற்றில் அமெரிக்கா மற்றும் போஸ்னியா-ஹெர்ட்ஸகோவினா அணிகள் மோதின. இதில் அமெரிக்கா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் 64-ஆவது நிமிடத்தில், போஸ்னியா வீரர் தாரிக் முஹாரெமோவிச்சின் கணுக்காலில் பாலோகுனின் கால்பட்டது. VAR (Video Assistant Referee) பரிசோதனைக்குப் பிறகு, பிரேசில் நாட்டைச் சேர்ந்த நடுவர் ரஃபேல் கிளாஸ் பாலோகுனுக்கு 'சிவப்பு அட்டை' வழங்கி வெளியேற்றினார். ஃபிஃபா விதிமுறைப்படி, சிவப்பு அட்டை பெறும் வீரருக்கு அடுத்த போட்டியில் (பெல்ஜியத்திற்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 போட்டி) விளையாடத் தானாகவே தடை விதிக்கப்படும்.

இதனால், பாலோகுன் அடுத்த போட்டியில் விளையாட முடியாது என்பதை அறிந்த அதிபர் ட்ரம்ப், இம்முடிவில் நேரடியாகத் தலையிட்டார். ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

ட்ரம்ப் தலையிட்டதைத் தொடர்ந்து, ஃபிஃபா தனது ஒழுங்குமுறை விதிகளின் பிரிவு 27-ஐ பயன்படுத்தி, பாலோகுனுக்கு விதிக்கப்பட்ட ஒரு போட்டித் தடையை ஓராண்டு காலத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அவர் பெல்ஜியத்திற்கு எதிராக விளையாடத் தகுதி பெற்றார். ஃபிஃபாவின் இந்த முடிவு கால்பந்து உலகில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பெல்ஜிய கால்பந்து சங்கம் (RBFA) இம்முடிவைக் கண்டு அதிர்ச்சியடைவதாகவும், இது விளையாட்டு தர்மத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது.

அதேபோல், ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (UEFA), ஃபிஃபாவின் இந்த நடவடிக்கை "அபாயகரமான எல்லையைத் (Red line) தாண்டியுள்ளது" எனச் சாடியது. அதேபோல் முன்னாள் ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர், "அரசியல் தொலைபேசி அழைப்புகளால் சிவப்பு அட்டைகளை மாற்ற முடியாது. ஃபிஃபா எங்குச் சென்று கொண்டிருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார். உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு நாட்டின் அதிபர் தலையிட்டு ஃபிஃபாவின் விதிமுறையை மாற்றிய இந்தச் சம்பவம் ஒரு வரலாற்றுச் சர்ச்சையாகப் பதிவாகியுள்ளது.