FIFA WC 2026 | முடிவுக்கு வந்த சகாப்தம்.. ஓய்வை அறிவித்த நெய்மர்.. பிரேசில் ரசிகர்கள் அதிர்ச்சி!
கால்பந்து உலகக் கோப்பை தொடரில் நார்வேயிடம் பிரேசில் அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியேறியதைத் தொடர்ந்து, நெய்மர் ஜூனியர் சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில்,உலகக் கோப்பையின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நார்வேயிடம் பிரேசில் அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியேறியதைத் தொடர்ந்து, நெய்மர் ஜூனியர் சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஃபிஃபா உலகக் கோப்பையின் 16-ஆவது சுற்று ஆட்டத்தில் நார்வேயிடம் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் தோல்வியடைந்தது. காயத்துடன் உலகக் கோப்பைக்குத் திரும்பிய அவர், பிரேசிலின் தொடக்கப் போட்டிகளைத் தவறவிட்டார். ]
இருப்பினும், உடற்தகுதியை மீண்டும் பெற்ற பிறகும், அவர் மாற்று வீரராகவே பயன்படுத்தப்பட்டார்; ஸ்காட்லாந்து மற்றும் நார்வேக்கு எதிரான போட்டிகளில் அவர் களமிறங்கினார். இந்தப் போட்டியில் அவர் கடைசி நிமிடத்தில் பிரேசில் அணிக்காகப் பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்தார். ஆனால், அது அணியை வெற்றிபெற வைக்கப் போதுமானதாக அமையவில்லை. இதையடுத்து, ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி நார்வேயிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அவ்வணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர், தனது 34-வது வயதில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, அவரது 16 ஆண்டுகாலப் புகழ்பெற்ற விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து கண்ணீருடன் பேசிய அவர், “நான் எனது முழு முயற்சியையும் செய்தேன். கடந்த 2010-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மெட்லைஃப் மைதானத்தில்தான் பிரேசில் அணிக்காக எனது முதல் சர்வதேச போட்டியைத் தொடங்கினேன். இப்போது அதே மைதானத்தில் எனது சர்வதேச பயணம் முடிவுக்கு வந்துள்ளது. எல்லாம் முடிந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
பிரேசில் கால்பந்து வரலாற்றில் புகழ்பெற்ற வீரர் பீலேயின் (Pele) சாதனையை முறியடித்து, அவ்வணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை நெய்மர் ஜூனியர் பெற்றுள்ளார். பிரேசில் தேசிய அணிக்காக சுமார் 130 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 80 கோல்களை அடித்துள்ளார் மற்றும் 59 கோல்களுக்கு உதவியாக இருந்துள்ளார். பிரேசில் அணிக்காக 2013-இல் ஃபிஃபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையையும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தையும் வென்று தந்துள்ளார். பிரேசில் தேசிய அணிக்கான சர்வதேச போட்டிகளில் இருந்து மட்டுமே ஓய்வு பெற்றுள்ள நெய்மர், கிளப் கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளார். தற்போது அவர் பிரேசிலின் புகழ்பெற்ற சாண்டோஸ் எஃப்சி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அணிக்காக நெய்மர் விளையாடாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தாலும், கிளப் போட்டிகளில் அவரது வருகை நிச்சயம் அவர்களை உற்சாகப்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

