virat kohli, rohit sharma afp
கிரிக்கெட்

ICC தரவரிசை.. ரோகித், கோலி பெயர்கள் மிஸ்ஸிங்.. பரவிய வதந்தி.. நடந்தது என்ன?

பேட்டர்களுக்கான புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா, விராட் கோலி பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Prakash J

இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக ஜொலித்த ரோகித் சர்மாவும், விராட் கோலியும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றனர். ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர்கள் விளையாடுவதாக தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்தும் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஐசிசி வெள்யிட்ட தரவரிசைப் பட்டியலில் அவர்களது பெயர்கள் இல்லாமல் போனது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக ஜொலித்த ரோகித் சர்மாவும், விராட் கோலியும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றனர். ஆனாலும் 2027 உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பதில் இந்த ஜோடி, இலக்கு நிர்ணயித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆயினும், அவர்களுடைய ஒருநாள் போட்டி குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பேட்டர்களுக்கான புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அவர்களது பெயர்கள் இடம்பெறாததால், அவர்களின் ஓய்வு வதந்திகள் பற்றிய செய்திகளும் வைரலாகி வருகின்றன.

icc list

முன்னதாக, ஆகஸ்ட் 13 அன்று புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப்படி, ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் ரோஹித் சர்மா, பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் ஷுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்தார். இதற்கிடையில் கோலி தனது 4வது இடத்தைத் தக்க வைத்துக்கொண்டார். இருப்பினும், கடந்த வாரம் வரை இந்தப் பட்டியலில் ரோஹித் மற்றும் கோலி இடம்பிடித்திருந்த நிலையில், சமீபத்திய தரவரிசையில் அவர்கள் இருவரும் இல்லாதது ஓய்வு குறித்த ஊகங்களைத் தூண்டியது.

ஐ.சி.சி. விதிமுறைப்படி, சுமார் 9 மாத காலம் ஒரு விளையாட்டு வீரர் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால் அவரது பெயர் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப்படும் அல்லது ஓய்வு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டும் இவர்கள் விஷயத்தில் நடக்கவில்லை. இதையடுத்து, ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் அவர்கள் ஓய்வு பெற்றுவிட்டார்களோ என்ற வதந்தி பரவியது.

2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியில் இருவருக்கும் இடமில்லை என்பதை பிசிசிஐ மறைமுகமாக தெரிவிக்கிறதா எனவும் ரசிகர்கள் சாடி வருகின்றனர். பி.சி.சி.ஐ. இருவரையும் ஓய்வுபெறும்படி கட்டாயப்படுத்திவிட்டதா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ரசிகர்களின் பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில் சில மணி நேரங்களுக்குப் பிறகு ஐசிசி தனது தவறைத் திருத்தியது. இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட குழப்பம் எனத் தெரியவந்தது. அதன்பின் ஐசிசி வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா 2-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் இடம்பெற்றனர். அதேநேரத்தில், இந்த ஜோடி 2027 உலகக் கோப்பையில் இடம்பிடிக்க வேண்டுமானால், வரவிருக்கும் விஜய் ஹசாரே டிராபியில் ஜொலிக்க வேண்டும் என பிசிசிஐ விரும்புகிறது. அதைவைத்தே இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என செய்திகளும் பிசிசிஐ வட்டாரத்தில் பரவி வருகிறது. நடப்பாண்டில் அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்குப் பிறகு அவர்கள் இருவரும் ஓய்வு பெறக்கூடும் என்ற வதந்தியும் பரவி வருகிறது. இருப்பினும், பிசிசிஐ அவர்களின் எதிர்காலம் குறித்து எந்த அவசரமும் எடுக்கவில்லை என்று மற்றொரு அறிக்கை கூறுகிறது.