சூர்யகுமார், அபிஷேக் எக்ஸ் தளம்
கிரிக்கெட்

T20 WC | ஹாட்ரிக் டக் அவுட் ஆன அபிஷேக்.. மறைமுகமாகச் சாடிய சூர்யகுமார்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஹாட்ரிக் டக் அவுட் ஆன அபிஷேக் சர்மா மீது பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

Prakash J

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், அபிஷேக் சர்மா இதுவரை நடைபெற்ற அனைத்து லீக் போட்டிகளிலும் டக் அவுட் முறையிலேயே வெளியேறி இருந்தார். அவரது பேட்டிங் குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் மறைமுகமாகச் சாடியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் முதலிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.

அபிஷேக் சர்மா

இதற்கிடையே, இந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து சோடை போய் வருகிறார். உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, இந்தியாவின் மிகப்பெரிய போட்டி வெற்றியாளர்களில் ஒருவராக இந்தப் போட்டியில் நுழைந்தார். ஆனால், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இதுவரை முடிந்த லீக் போட்டிகளான அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் முறையில் வெளியேறி சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து அவர்மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அமீர், ”அபிஷேக் சர்மா ஸ்லாட்டில் உள்ள ஒவ்வொரு பந்தையும் அடிக்க விரும்புகிறார். ஆனால் உலகக்கோப்பை போன்ற பெரிய ஆட்டங்களில், அழுத்தம் நிறைந்த கிரிக்கெட்டில் அவரால் அனைத்துப் பந்துகளையும் ஹிட் செய்ய முடியாது. அதனால்தான் சல்மான் ஆகா, ஆர்யன் தத் போன்ற பவுலர்கள் அவரை அவுட் செய்தனர். சர்வதேச கிரிக்கெட் உங்கள் குறைகளை அம்பலப்படுத்தும்” என அறிவுரை வழங்கியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ்

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவோ அபிஷேக்கை மறைமுகமாகச் சாடியுள்ளார். அவர், ”வெற்றி பெற்றாலும் சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்தி பாடங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பேட்ஸ்மேனும் வெற்றிக்கு பங்களிக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு வீரர்களுக்கு சிறந்த நாளாக அமைகிறது. ஆனால் எனக்கு அனைவரும் வெற்றிக்காக பங்களிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். ஒவ்வொரு பேட்டர்களும் தங்கள் பங்கிற்கு முழுப் பொறுப்பேற்கும்போதுதான் இதுபோன்ற மீள் வருகைகள் நடக்கும். அனைத்து பேட்டர்களும் பொறுப்பு என்ன என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் அபிஷேக்கின் பேட்டிங் திறமை குறித்தே மறைமுகமாகச் சாடியுள்ளார் எனக் கூறப்படுகிறது.