பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் இந்தியாவுடனான் போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இந்த நிலைப்பாட்டை எடுத்ததை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் கடுமையாகச் சாடியுள்ளனர்
பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் இந்தியாவுடனான் போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்பில் புறக்கணிப்பிற்கான காரணங்களைக் குறிப்பிடப்படவில்லை. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையோ அல்லது தடைகளையோ பிசிபி தனது நிலைப்பாட்டை ஐசிசிக்கு முறையாகத் தெரிவித்த பின்னரே பரிசீலிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் இந்த நிலைப்பாட்டை எடுத்ததை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர், “இதில் என்ன புதுமை இருக்கிறது? பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறுவதை நாம் அனைவரும் அறிவோம். பின்னர், 'எங்கள் ரசிகர்கள் இன்னும் அதிகமாக விளையாடச் சொன்னார்கள்' என்று கூறி, தங்கள் ஓய்வைத் திரும்பப் பெறுகிறார்கள். இது மீண்டும் நடக்கலாம். பாகிஸ்தான் வீரர்கள் முன்னுதாரணங்களை அமைத்துள்ளனர். அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு மீண்டும் மீண்டும் வருகிறார்கள். எனவே பிப்ரவரி 15ஆம் தேதிக்கு முன்பு அப்படி ஏதாவது நடக்கலாம். இந்தியாவுக்கு எதிரான பெரிய போட்டியில் இருந்து விலகுவதற்கு பாகிஸ்தானிடம் சரியான காரணம் இல்லையென்றால், அல்லது ஒப்பந்தத்தை மீறுவதற்கான காரணங்களைக் காட்ட முடியாவிட்டால், ஐ.சி.சி வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ”பாகிஸ்தான் அணி இந்தியா போட்டியை புறக்கணிப்பது ஐ.சி.சி.யின் வருவாயில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
தண்டனை நடவடிக்கை எடுக்க உலக அமைப்புக்கு உரிமை உண்டு. இந்த முடிவு ஐ.சி.சி.யை பாதிக்கலாம், எனவே ஐ.சி.சி.க்கு சட்ட நடவடிக்கை எடுக்க முழு உரிமையும் உள்ளது. இது முழு போட்டியையும் பாதிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.