இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என வென்ற இந்திய அணி இங்கிலாந்தை மொத்தமாக ஆட்டிப்படைத்தது.
அதற்குபிறகு தொடங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக வெற்றியுடன் செல்லும் எண்ணத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.
ஆனால், இரண்டாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஓவருக்கு ஒன்று அல்லது இரண்டு பவுண்டரிகள் என விரட்டிக்கொண்டே இருந்த இந்த ஜோடி, இங்கிலாந்து பவுலர்களை செட்டில் ஆகவிடாமல் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டது.
விராட் கோலி அரைசதமடித்த நிலையில் 52 ரன்னில் அடில் ரசீத்தின் பந்துவீச்சில் வெளியேறினார், தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் சுப்மன் கில் 16வது அரைசதத்தை பதிவுசெய்து 78 ரன்களுடன் விளையாடிவருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகளிலும் அரைசதமடித்த சுப்மன் கில், 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடரில் இந்திய அணிக்காக தொடர்ந்து அரைசதங்கள் அடித்த 7வது வீரராக மாறி சாதனை படைத்தார்.
இருதரப்பு தொடரில் 3 போட்டிகளிலும் அரைசதமடித்த இந்தியர்கள்:
1. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் vs இலங்கை (1982)
2. திலிப் வெங்க்சர்க்கர் vs இலங்கை (1985)
3. அசாருதீன் vs இலங்கை (1993)
4. மகேந்திர சிங் தோனி vs ஆஸ்திரேலியா (2019)
5. ஸ்ரேயாஸ் ஐயர் vs நியூசிலாந்து (2020)
6. இஷான் கிஷன் vs வெஸ்ட் இண்டீஸ் (2023)
7. சுப்மன் கில் vs இங்கிலாந்து (2025)
இந்தப் போட்டியில் சுப்மன் கில் சதம் விளாசினார். 112 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 78 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரும் ஆட்டமிழக்க, இந்திய அணி 38.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.