shreyas iyer web
கிரிக்கெட்

கேப்டனாக 5 போட்டியில் வரிசையாக தோல்வி.. சொந்த அணியையே சாடிய ஸ்ரேயாஸ் ஐயர்!

உலகக்கோப்பை வென்ற சூர்யகுமார் யாதவை நீக்கிவிட்டு ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் தலைமையில் வரிசையாக 5 தோல்விகளை சந்தித்து இந்தியா படுமோசமாக செயல்பட்டுவருகிறது.

Rishan Vengai

சூர்யகுமார் யாதவின் வெற்றிகரமான கேப்டன் காலத்துக்கு பின், டி20 அணியின் பொறுப்பு ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்றப்பட்டது. ஆனால் அவரது தலைமையில் இந்தியா அயர்லாந்துக்கு எதிராக 0-2 எனவும், இங்கிலாந்தில் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து, 76 ரன்னில் சுருண்டு 125 ரன் வித்தியாசத்தில் வரலாற்று தோல்வி கண்டது. இதை ‘atrocious’ என ஐயர் கடுமையாக விமர்சித்தார்.

இந்திய டி20 கேப்டனாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் 52 போட்டிகளில் வெறும் 8 போட்டிகளில் மட்டுமே தோல்வியை கண்டு வெற்றிகரமான இந்திய கேப்டனாக செயல்பட்டார். அவருடைய வெற்றி சராசரி 80 சதவீதத்திற்கு அதிகமாக இருந்த நிலையில், அவர் தலைமையில் 8 இருதரப்பு டி20 தொடர்களை வென்ற இந்தியா, ஆசியக்கோப்பை உடன் சேர்த்து உலகக்கோப்பையையும் வென்று அசத்தியது.

sky

கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ், பேட்ஸ்மேனாக மோசமாக ஓட்டத்தை கொண்டிருந்த நிலையில், உலகக்கோப்பை வென்ற கையோடு கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர் கையில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மேலும் டி20 அணியிலிருந்தும் சூர்யகுமாருக்கான இடம் பறிக்கப்பட்டது.

shreyas iyer

இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அயர்லாந்துக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்ற இந்திய அணி, முதல்முறையாக 0-2 என படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் 3 போட்டிகளில் 0 வெற்றியை கண்டிருக்கும் இந்திய அணி படுமோசமாக செயல்பட்டுவருகிறது. அதிலும் 3வது டி20 போட்டியில் 76 ரன்னில் சுருண்டு 125 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது.

இந்தசூழலில் மிக மோசமான தோல்விக்கு பிறகு பேசியிருக்கும் இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய அணி படுமோசமாக விளையாடியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அட்ராசியஸ் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஸ்ரேயாஸ், இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

இதுகுறித்து போட்டிக்கு பின் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “எங்களுடைய ஆட்டம் மிகவும் மோசமாக (atrocious) இருந்தது என்று நான் நினைக்கிறேன். உண்மையைச் சொல்வதானால், இதைவிட சரியான வார்த்தை என்னிடம் இல்லை. பவர்பிளேவில் அதிகப்படியான விக்கெட்டுகளை இழந்தோம், அங்கேயே எங்கள் அணி தோற்றுவிட்டது. நாங்கள் நிச்சயமாக மோசமாக விளையாடினோம், ஆனால் அதிலிருந்து நிறைய பாடங்களையும் கற்றுக்கொண்டோம். இதற்கு பிறகு வீரர்கள் அடிப்படையை கற்றுக்கொள்ள வேண்டும், எப்படி தாக்கத்தை ஏற்படுத்துவது அணிக்காக எப்படி வெற்றியை உருவாக்குவது என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் சுயமாக சிந்தித்து, போட்டிகளில் எப்படி வெற்றி பெற முடியும் என்பதைப் பார்த்து, அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும்” என சொந்த அணியையே கடுமையாக சாடியுள்ளார்.