பாகிஸ்தான் சூப்பர் லீக் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்க வீரர் ரிலே ரூசோ, IPL-ஐ விட PSL தான் நிஜ கிரிக்கெட் என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரிலே ரூசோ கூறுகையில், "இரண்டு லீக் தொடர்களிலும் சாதக பாதகங்கள் உள்ளன. IPL என்பது மிக நீண்ட தொடர். ஆனால், PSL மிகக் குறுகிய காலத்திற்குள் விறுவிறுப்பாக நடக்கும் தொடர். அங்கு ஆடுகளத்தில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும். IPL தொடரின் பின்னணியில் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் இருப்பதால், அது உண்மையான கிரிக்கெட்டை விட ஒரு சினிமா போலத்தான் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவும் IPL தொடரை விட PSL தொடரையே விரும்புவதாகக் கூறியிருந்தார். IPL தொடரில் இரண்டு மாதங்கள் விளையாடினாலும், ஒரு சிறப்பு சுழற்பந்து வீச்சாளருக்கு வழங்கப்படும் ஊதியம் திருப்திகரமாக இல்லை என அவர் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சையாகப் பேசியுள்ள ரிலே ரூசோவின் IPL பயணம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. கடந்த 2011 முதல் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று வரும் இவர், பெங்களூரு, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். மொத்தம் 22 IPL போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 473 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 2024-ல் பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை 8 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால், 2025 மெகா ஏலத்தில் அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு கூட இவரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.
தற்போது PSL தொடரில் சுமார் 1.66 கோடி ரூபாய் மதிப்பிலான தொகைக்கு அவர் விளையாடி வருகிறார். அங்கு விளையாடிய 4 போட்டிகளில் 19.75 என்ற சராசரியில் வெறும் 79 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். IPL ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட விரக்தியில் ரூசோ இதுபோன்று பேசுவதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.