சூர்யவன்ஷியின் சிக்ஸ் அடிக்கும் திறமையை விடுங்க.. ஒரு SINGLE-ஐ பார்த்து மிரண்ட ஜாம்பவான்!
2026 ஐபிஎல் தொடரில் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி பும்ரா, ஹசல்வுட் போன்ற உலகத் தர பவுலர்களை சிக்சர்களில் டீல் செய்கிறார். ஆனால் சூர்யவன்ஷியின் திறமையில் உண்மையில் மிரள வைத்தது சிக்ஸ் அல்ல, ஒரு சிங்கிள் தான் என முன்னாள் ஜாம்பவான் ஸ்பின்னர் கூறுகிறார்.
15 வயதில் ஒரு சிறுவனால் எப்படி உலகின் டாப் பவுலர்களான பும்ராவையும், ஹசல்வுட்டையும் சிக்சர்களுக்கு அனுப்ப முடியும். ’கண்ணை மூடி சுத்துறான் பேட்டில் பட்டுவிடுகிறது’ என்று மேம்போக்காக சொல்லிவிட்டு கடந்துவிட முடியாது, பவுலர்களின் லெந்தையும், வேரியேசனையும் எளிதில் கணித்துவிடுகிறார் 15 வயதான சுட்டிக்குழந்தை சூர்யவன்ஷி.
ஒருவேளை பவுலர்களின் வேரியேசனில் மாட்டிக்கொண்டாலும் தன்னுடைய நேர்த்தியான புத்தி கூர்மையாலும், அபாரமான பேட் ஸ்விங்காலும் அதனை எளிதில் முறியடித்துவிடுகிறார் சூர்யவன்ஷி. இதுதான் அவரை சாதாரண ஒரு ஹிட்டிங் பேட்ஸ்மேனை விட அதிக மதிப்புமிக்க ஒரு வீரராக மாற்றிவிடுகிறது.
எப்படி டா இவன் நம்பர் 1 பவுலர்களை எல்லாம் ஈஸியா அடிக்கிறான், எங்கிருந்து இந்த பேட் ஸ்விங்கை எடுத்துட்டு வரான் என்று ஆச்சரியப்பட்டு போகிறவர்களுக்கெல்லாம், ஒரு சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்துள்ளான் இந்தியாவின் ஜாம்பவான் கிரிக்கெட்டரான ரவிச்சந்திரன் அஸ்வின்.
சூர்யவன்ஷியின் SINGLE-ஐ பார்த்து மிரண்ட அஸ்வின்..
2026 ஐபிஎல் தொடரில் தன்னுடைய ப்ரைம் ஃபார்மில் இருந்துவரும் வைபவ் சூர்யவன்ஷி, நடந்து முடிந்த 4 போட்டிகளில் 17 பந்தில் 52 ரன்கள், 18 பந்தில் 31 ரன்கள், 14 பந்தில் 39 ரன்கள், 26 பந்தில் 78 ரன்கள் என மிரட்டிவருகிறார். இந்த நான்கு ஆட்டங்களில் மட்டும் 18 சிக்சர்களையும், 18 பவுண்டரிகளையும் பறக்கவிட்டுள்ளார் சூர்யவன்ஷி. இதில் பும்ரா, ஹசல்வுட் போன்ற பவுலர்களுக்கு எதிரான சிக்சர்களும் அடங்கும்.
இந்தசூழலில் எல்லோரும் சூர்யவன்ஷியின் சிக்ஸர் அடிக்கும் திறமையை மெச்சிவரும் நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் சூர்யவன்ஷியின் SINGLE-ஐ பார்த்து மிரண்டதாக பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய யூடியூப் சேனலில் சூர்யவன்ஷியின் திறமை குறித்து பேசியிருக்கும் அஸ்வின், “அலைஸ்டர் குக், டேவிட் வார்னர், ஷான் மார்ஸ் போன்ற பல உலகத்தரம் வாய்ந்த இடது கை பேட்ஸ்மேன்களுக்கு நான் பந்துவீசியிருக்கன். சில பந்துகளை என்னால் காற்றில் நிறுத்தி வீச முடியும், அப்படியான பந்துகளில் பலபேர் அடிக்க சென்று அவுட்டாகிவிடுவார்கள் அல்லது எட்ஜ்-ஆகி சிங்கிள் செல்லும், பொதுவாக சொன்னால் பீட்டன் ஆகிவிடுவார்கள். சூர்யவன்ஷி பல ஸ்பின்னர்களுக்கு எதிராக முன்பே அடித்திருந்ததால், இவரால் என்ன செய்யமுடியும் என யோசித்து நான் காற்றில் பந்தை நிறுத்தி வீசினேன். என்னுடைய பந்திற்கு அவரும் பீட்டன் ஆகிவிட்டார், ஆனால் உடனடியாக அட்ஜஸ்ட் செய்து ஒரு ஃபிளிக் ஷாட் ஆடி சிங்கிளிற்கு சென்றுவிட்டார். இதை என்னால் நம்பவே முடியவில்லை, இவரால் எப்படி பீட்டன் ஆகியும் எட்ஜ் எடுக்காமல் சிங்கிளுக்கு செல்லமுடிந்தது என ஆச்சரியமாக இருந்தது. அப்போதே தோன்றியது இந்த பையன் சாதாரண டேலண்ட் இல்லை என்று” என புகழ்ந்து பேசியுள்ளார்.

